ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை: மணிப்பூரில் அரசியல் பரபரப்பு

1 day ago 5

இம்பால்: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்களின் திடீர் ஆலோசனை நடந்ததால், அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், நேற்று மாலை முன்னாள் அமைச்சர் தோங்கம் பிஸ்வஜித் சிங்கின் இம்பால் இல்லத்தில் 23 பாஜக எம்எல்ஏக்கள் கூடினர். அவர்கள் மணிப்பூரில் மீண்டும் அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், பாஜக எம்ஏல்ஏக்களின் திடீர் ஆலோசனை நடத்தியதால் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மாநில மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் இரண்டு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘44 எம்எல்ஏக்களும் மக்கள் விருப்பப்படி மாநிலத்தில் அரசு அமைக்கத் தயாராக உள்ளனர்’ என்று கூறினார். அதன் அடிப்படையிலேயே பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏக்கள் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக மைதேய் மற்றும் குக்கி – ஜோ சமூகங்களுக்கு இடையே நடந்த இன மோதல்களால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நெருக்கடிக்கு அரசியல் உறுதிபாடு, அரசியலமைப்பு பாதுகாப்பு, பாகுபாடற்ற சட்ட நடவடிக்கை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை ஆகியவை அவசியமானவை ஆகிறது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மைதேய் மற்றும் குக்கி-ஜோ சமூகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

சிவில் சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் மதக் குழுக்களை உள்ளடக்கிய அடிமட்ட அளவிலான சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்று கூறினர்.

The post ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை: மணிப்பூரில் அரசியல் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article