
புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
இந்த சூழலில் டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தது, தனது குடும்பத்தினரை சந்தித்தது போல் இருந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சோனியா காந்தி மற்றும் அன்பு சகோதரர் ராகுல் காந்தியுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் டெல்லி இல்லத்தில் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது. அது ஒருபோதும் ஒரு வருகையாக உணரப்படுவதில்லை; உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது