சொரிமுத்தையனார் கோயில், தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

1 day ago 3

*பள்ளி மாணவர்கள், வனப்பணியாளர்கள் நடவடிக்கை

விகேபுரம் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயில், தாமிரபரணி ஆற்று பகுதியில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்களை பள்ளி மாணவர்கள், வனப்பணியாளர்கள் அகற்றினர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா உத்தரவின்படி முண்டந்துறை வனச்சரகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் முண்டந்துறை வனச்சரக அலுவலர் கல்யாணி, பாபநாசம் வனச்சரக அலுவலர் குணசீலன் ஆகியோர் தலைமை வகித்தார்.

விழாவில் முத்தமிழ் பப்ளிக் பள்ளியின் தலைவர் அமரவேல், தாளாளர் ஜெயந்தி வழிகாட்டுதலின்படி வேளாண்மை ஆசிரியர் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி மற்றும் முத்தமிழ் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். உலக சுற்றுச்சூழல் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு வனத்தினை தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், வனத்தை பாதுகாப்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகள், வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து ‘உலகளாவிய நெகிழி மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதல்’ என்ற தலைப்பில் சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதி, தாமிரபரணி ஆற்றுப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.

The post சொரிமுத்தையனார் கோயில், தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article