சேலம் விமான நிலைய விரிவாக்க பணி தீவிரம்: கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்கள் அளவீடு

5 months ago 16

சேலம்: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள காமலாபுரம் விமான நிலையம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 170 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 684 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக விமான நிலையத்தை சுற்றியுள்ள காமலாபுரம், காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய ஊராட்சிகளில், 177 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஏற்கனவே வருவாய்த்துறை அதிகாரிகள், அளவீடு செய்து முடித்துள்ளனர். வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாய நிலத்தில் உள்ள மரங்கள், பயிர்கள் உள்ளிட்டவை கணக்கெடுத்து மதிப்பிட்டுள்ளனர்.

தற்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கீர்த்திகரன் தலைமையிலான அதிகாரிகள், முதல்கட்டமாக எடுக்கப்படும் 177 ஏக்கரில் உள்ள கட்டிடங்கள், அதன் மதிப்புகள் ஆகியவைகளை அளவீடு செய்து மதிப்பிடும் பணியை நேற்று தொடங்கினர். இதில் வீட்டின் தரம், வீட்டில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், மின்சாதன பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், மாட்டு கொட்டகைகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு, தனித்தனியாக மதிப்பிடும் பணியை செய்து வருகின்றனர். மேலும், நீர்வளத்துறை அதிகாரிகள் கிணறு, ஆழ்துளை கிணறு உள்ளிட்டவைகள் குறித்து அளவீடு செய்து, மதிப்பிடும் பணியை தொடங்கினர். தற்போது காடையாம்பட்டி தாலுகா பொட்டியபுரம் ஊராட்சியில், அதிகாரிகள் அளவீடு செய்து மதிப்பிடும் பணியை செய்து வருகின்றனர்.

The post சேலம் விமான நிலைய விரிவாக்க பணி தீவிரம்: கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்கள் அளவீடு appeared first on Dinakaran.

Read Entire Article