சேலம் பெரியார் பல்கலை. துணை வேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

3 weeks ago 4

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி அரசு அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாகக் கூறி பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவரும், அந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தங்களை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக சில ஊழியர்களும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர் இந்தப் புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்டம் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இந்த தடையை நீக்க கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட ஆரம்ப நிலையிலேயே தடை விதிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து விசாரணை நடத்த முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். புலன் விசாரணையை அனுமதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்ககு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்று அனுமதியளித்து விசாரணை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

The post சேலம் பெரியார் பல்கலை. துணை வேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article