சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழி ரெயில்பாதை திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

1 day ago 4

சென்னை,

மத்திய அரசின் 2025-2026-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரெயில்வே துறைக்கு ரூ.2.65 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இவற்றில் தெற்கு ரெயில்வேயில் தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 4 கோட்டங்களில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய வழித்தடம், இருவழிப்பாதை, ரெயில் நிலையம் மேம்பாடு போன்ற பணிகள் செய்யப்பட உள்ளது.

அந்த வகையில், சேலம் ரெயில்வே கோட்டத்தை பொறுத்தவரையில் மொரப்பூர்-தர்மபுரி அகல ரெயில்பாதை திட்டம், ஈரோடு-பழனி அகல ரெயில்பாதை திட்டம், சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டம் போன்றவை நிலுவையில் உள்ளது. இவற்றில் சேலம்-கரூர்-திண்டுக்கல் இடையே 160 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதை அமைக்க கடந்த 2020-ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் திட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையிலேயே அத்திட்டப்பணி கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழி ரெயில்பாதை திட்டத்தை ரூ.1,600 கோடியில் நிறைவேற்றலாம் என திட்ட மதிப்பீடு தயார் செய்திருந்தநிலையில், தற்போது அதன் திட்ட மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி என்ற நிலைக்கு வந்திருக்கிறது. நடப்பாண்டில் தான் சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்த நிதியை வைத்து ஆரம்ப கட்ட பணிகளை ரெயில்வே நிர்வாகம் துரிதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம்-கரூர் புதிய அகல ரெயில்பாதை அமைக்கும்போதே இருவழிப்பாதைக்கு தேவையான அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. அதனால் புதிதாக எங்கேயும் நிலம் எடுக்க வேண்டியதில்லை. ஏற்கனவே அமைந்துள்ள பாதை அருகில் மற்றொரு பாதையை அமைத்திடவே இத்திட்டம் போடப்பட்டு உள்ளது. அதனால் அடுத்து வரும் ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்தால் மிக விரைவில் பணிகள் நிறைவடைந்து இருவழிப்பாதை பயன்பாட்டிற்கு வரும் என ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read Entire Article