கோவை: சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 7 மணியளவில் கோவை சென்று கொண்டிருந்தது. வடகோவை ரயில் நிலையம் அருகே சிக்னல் கிடைக்காமல் ரயில் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் சிக்னல் கிடைக்காததால் லோகோ பைலட் தகவலின்படி கோவை ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரித்து, சிக்னலில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியதால் ரயில் புறப்பட்டது. பின்னர், கோவை ரயில் நிலையம் அருகே 4 பேர் தண்டவாளத்தில் கல் வைத்திருப்பதும், சிக்னல் பாக்சை கல்லால் சேதப்படுத்தியதும் தெரியவந்தது. லோகோ பைலட் உடனே ரயிலை நிறுத்தியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவலின்படி கோவை ரயில்வே போலீசார் வந்து, தூத்துக்குடியை சேர்ந்த வின்சென்ட் ராஜ் (20), விஜய்சங்கர் (21), சதீஷ்குமார் (21), புவனேஷ்வரன் (22) என்ற 4 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், சதீஷ்குமாரின் சகோதரர் கோவை தென்னம்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவரை பார்க்க திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 4 பேரும் நேற்று காலை ரயிலில் கோவை வந்துள்ளனர். பின்னர் கோவை ரயில் நிலைய தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது, போதையில் தண்டவாளத்தில் கல் வைத்ததோடு சிக்னல் பாக்சையும் உடைத்துள்ளனர் என்றனர்.
The post சேரன் எக்ஸ்பிரஸை கவிழ்க்க சதி: தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.