சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.15.61 கோடியில் பல்நோக்கு மையம், முதல்வர் படைப்பகம், நூலகம் கட்டும் பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

14 hours ago 3

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.15.61 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மையம், முதல்வர் படைப்பகம் மற்றும் நூலகம் கட்டும் பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை, ராயப்பேட்டை பைகிராப்ட்ஸ் சாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 15,408 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய புதிய பல்நோக்கு மையம் கட்டப்படவுள்ளது. இந்த பல்நோக்கு மையம் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 224 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபம், உணவு அருந்தும் இடம், தங்கும் அறைகள், நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மின் தூக்கி வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

மேலும், திருவல்லிக்கேணி ஜானி பாட்ஷா தெருவில் உள்ள பொது நூலகத்தை மேம்படுத்தும் விதமாக ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 4,273 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன பொது நூலகம், திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள பொது நூலகத்தை மேம்படுத்தும் விதமாக ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் 2,420 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன பொது நூலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சேப்பாக்கம் கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை எதிரில் சைடோஜி தெருவில் பார்த்தசாரதி திருக்கோயில் இடத்தில் ரூ.77.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 3 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தை துணை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், மகாகவி பாரதியார் இல்லம் அருகில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெருவில் ரூ.3.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 குடியிருப்புகள் கொண்ட கட்டிடம் மற்றும் ரூ.1.87 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 குடியிருப்புகள் கொண்ட கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் 12 பேருக்கு குடியிருப்பு ஆணைகளை துணை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்பி தயாநிதி மாறன், நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டல குழு தலைவர் மதன்மோகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.15.61 கோடியில் பல்நோக்கு மையம், முதல்வர் படைப்பகம், நூலகம் கட்டும் பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Read Entire Article