
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திரகுமார். இவரது மனைவி ஜீவிதா. இவர்களுக்கு மணிகண்டன் (18 வயது) என்ற மகனும், பவித்ரா (16 வயது) என்ற மகளும் இருந்தனர். இதில் மணிகண்டன் ஐ.டி.ஐ. படித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். பவித்ரா மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் பவித்ரா நேற்று இரவு, செல்போனை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்தனர். மேலும் மணிகண்டன் தனது தங்கையின் செல்போனை கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பவித்ரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டனும், தனது தங்கையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். இதில் அண்ணன், தங்கை இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.