
தமிழ் மொழிக்காக செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கும் நோக்கில் தனியார் நிறுவனம் சார்பில் தமிழ் 'ஏ.ஐ.' திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னை தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் 'ஏ.ஐ.' திட்ட நிறுவனர் அஷ்வத்தாமன் வரவேற்புரை ஆற்றினார். இதில் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் ஏ.ஐ.யுடன் இணைவதில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக இருக்கும். தமிழ்மொழி மற்றும் இந்திய மொழிகள் ஏ.ஐ.யுடன் இணைவதில் இது ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும். இந்த திட்டம் தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்திற்கும் ஏ.ஐ. துறையில் புதிய வாயிலாக அமையும்.
தமிழ்நாடு மின்னணு உற்பத்தியின் மையமாக செயல்படுகிறது. தற்போது செல்போன், லேப்டாப், சர்வர் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் புதிய மின்னணு உற்பத்தி கிளஸ்டருக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அதன் கட்டுமானம் தொடங்கும். இந்த முயற்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டை தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணிக்கு கொண்டுசெல்லும்.
எலக்ட்ரானிக்ஸ் துறையின் தலைமையாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் பலமுறை கூறியுள்ளார், அது தற்போது நிறைவேறுகிறது. ஏற்கனவே வந்தே பாரத் ரெயில் உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதிநவீன ரெயில் சக்கர உற்பத்தி தொழிற்சாலை சென்னை அருகே விரைவில் வரவிருக்கிறது. இந்தியாவின் எதிர்கால ரெயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மலேசியா நாட்டின் தேசிய ஒற்றுமைக்கான துணை மந்திரி சரஸ்வதி கந்தசாமி, லண்டன் செல்ஸ்போர்ட் அரசு கவுன்சிலர் பாப்பா வெற்றி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். இது தவிர பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.