சென்னை: எத்தனை காலங்கள் மாறினாலும் அதற்கு ஈடுகொடுத்து நிற்கும் செம்மொழியாம் தமிழ் மீது இந்தி சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக் களம் என்றால் திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் முதன்மையாக நிற்கும். திமுக பிறந்தது முதல் இந்த 75 ஆண்டுகளாக சந்திக்காத களம் இல்லை.
எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் கிடையாது. வழக்குகள், சிறைவாசம், உயிர்த்தியாகம் எல்லாவற்றையும் தாங்கித்தான் தாய்மொழியாம் தமிழையும் தமிழர்களின் உரிமையையும் காக்கின்ற மகத்தான இயக்கமாக திகழ்கிறது. அதனால்தான், தி.மு.க ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள் அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையையும் மொழி வழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப்பவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள்.
இந்தியும் தமிழைப் போல ஒரு மொழிதானே, கற்றுக்கொள்ளக்கூடாதா என்று கரிசனத்துடன் பேசுகிறவர்களிடம், “சமஸ்கிருதத்திற்குப் பதில் தமிழிலேயே கோயில்களில் அர்ச்சனை செய்யலாமா? தமிழும் செம்மையான மொழிதானே?” என்று கேட்டுப் பாருங்கள். அவர்களின் உண்மையான நோக்கமும் அவர்களின் அடையாளமும் அம்பலமாகிவிடும். அதனால்தான் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
இன்றைக்கு இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்கின்ற கட்சியின் தலைவர்கள் இந்தியைத் திணிப்பதும், அதை ஏற்க மறுத்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதுமாக இருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டு பா.ஜ தலைவர்களோ, இந்தி தெரியாத தமிழர்களை நோக்கி வடமாநிலத்தவர்கள் திட்டினால் புரிந்து கொள்ள முடியாது என்றும், வடமாநிலங்களுக்கு சென்றால் உணவகங்களில் ஆர்டர் பண்ண முடியாது என்றும், கழிவறை செல்வதற்குக்கூட இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் எல்லோரும் எள்ளி நகையாடும் வகையிலான அற்பக் காரணங்களைச் சொல்கிறார்கள்.
ரயில் பயணத்தில் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் தமிழர்களை இந்தியில் திட்டினால், பதிலுக்கு நம்மவர்கள் அவர்களைத் தமிழில் திட்ட முடியாதா? சுயமரியாதை உணர்வும் சூடும் சுரணையும் உள்ள தமிழர்கள் அப்படித்தான் செய்வார்கள். இங்குள்ள பா.ஜ.வினர் எப்படிப்பட்டவர்களோ! இந்தியா என்பது ஒற்றை நாடல்ல, இது ஒரு துணைக் கண்டம். பல மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்ட நிலப்பரப்பு என்பதை ஒட்டுமொத்த மக்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் முதன்முதலில் உரக்க முழங்கிய இயக்கம் நம் திமுக.
அதன் விளைவாகத்தான், “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்கும்” என்ற உறுதிமொழியை பிரதமர் நேரு வழங்கினார். அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளும்போது, இந்திய மொழியான இந்தியை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று ‘அறிவுத் ததும்பி வழியும்‘ இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களும் அவர்களின் கட்சியினரும் கேட்கிறார்கள். ஆங்கிலம் எல்லா மாநிலங்களுக்கும் அந்நிய மொழி. ஆனால், இந்தி சில மாநிலங்களுக்கு மட்டும் தாய்மொழி. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் அனைத்திற்குமே அது அந்நிய மொழி.
இதனை நாடாளுமன்ற மாநிலங்களவையில் மிகத் தெளிவாக விளக்கிய அண்ணா, “இந்தி பேசும் மாநிலங்களின் மக்களுக்கு அதுவே தாய்மொழியாக இருக்கும். அதுவே அரசு மொழியாகவும் இருக்கும். அதுவே பயிற்று மொழியாகவும் இருக்கும். அதுவே மத்திய அரசின் மொழியாகவும் இருக்கும் இந்தி பேசும் மக்களுக்கு இவ்வளவு வாய்ப்புகள், உரிமைகளை வழங்கிவிட்டு, இந்தி பேசாத (மற்றமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட) எம் போன்ற மக்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டார்.
அன்று அண்ணா கேட்டதைத்தான் நாமும் கேட்கிறோம். அண்ணா உருவாக்கிய இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். காலம் மாறிவிட்டது அதனால் இந்தியைத் திணிப்போம் என்கிறார்கள் இன எதிரிகள். எத்தனை காலங்கள் மாறினாலும் அதற்கு ஈடுகொடுத்து நிற்கும் செம்மொழியாம் தமிழ் மீது இந்தி சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம். உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
The post செம்மொழியாம் தமிழ் மீது இந்தி சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம்: உயிரை கொடுத்தேனும் தமிழை காப்போம் – முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.