சென்னை: சென்னையில் அடுத்தடுத்து 6 மூதாட்டிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வெளிமாநில இரானி கொள்ளையன் ஜாபர், தரமணி ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். விமானம், ரயிலில் ஏறி தப்ப முயன்ற மற்ற 2 கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சைதாப்பேட்டை, சாஸ்திரி நகர், திருவான்மியூர், கிண்டி, வேளச்சேரியில் மொத்தம் 6 இடங்களில் 6 மூதாட்டிகளிடம் அடுத்தடுத்து செயின் பறிக்கப்பட்டது. திருவான்மியூரில் செயின் பறிப்பின்போது படுகாயமடைந்த மூதாட்டி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க
உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விமானத்தில் தப்ப முயன்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜாபர் உசேன் இரானி (32), மிசம்சா மேசம் இரானி (20), சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் தப்பிய சல்மான் உசேன் இரானி (32) ஆகிய 3 பேர் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டனர்.