சென்னையில் ரூ.39.75 கோடியில் 3 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.70.70 கோடி மதிப்பீட்டில் 10 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

2 months ago 9

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.39.75 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.70.70 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 39 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் போரூரில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மற்றும் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்து, 70 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

சென்னை, போரூர், ராமாபுரத்தில் சுமார் 16.63 ஏக்கர் பரப்பளவில் 15.75 கோடி ரூபாய் செலவில் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் ஈரநில பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவனது சமூக கல்வி மற்றும் காலநிலை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ‘நகர்ப்புற ஈரநில பூங்காவாக’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் சதுப்பு நிலம் சார்ந்த உயிரினங்கள் மற்றும் நீர்நிலைகளை பொதுமக்கள் கண்டுகளிக்க 600 மீட்டர் நீளமுள்ள பலகை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பூங்காவில் விளையாட்டு மைதானங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள், இருக்கை வசதிகள், வெளிப்புற உடற்பயிற்சி மையம், கண்காட்சி மேடைகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், நகர சூழலில் ஈர நிலங்களின் முக்கியத்துவத்தை விளக்கக் கூடிய வகையில் பிரதான நுழைவு வாயில் அருகில் கண்காட்சியையும் உள்ளடக்கியுள்ளது. இப்பூங்காவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செடிகள், மரங்கள், புற்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் நடப்பட்டுள்ளன.

இப்பூங்கா நகர்ப்புற பசுமை உள்கட்டமைப்பாக, இயற்கை நீர்நிலைகள் மூலம் 90 சதவிகித மழைநீரை சேகரித்து பூமிக்குள் உள்வாங்குவதன் மூலம் வெள்ளத்தின் பாதிப்பை குறைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும். மேலும், சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 4 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, சூரிய மின்சக்தி அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள்;

திருவொற்றியூர், சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு சந்தை வளாகத்தில் 20 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, மின்சார அறை, மின்னணு எடை பாலம், குடிநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள்; என மொத்தம் 39.75 கோடி ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்

சென்னை, காட்டுப்பாக்கம், இந்திரா நகரில் 19.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சென்னை, போரூர், கணேஷ் நகரில் 12.93 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள பன்னோக்கு மையங்கள்; சென்னை, சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் 1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானம், குத்தம்பாக்கம், பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ மற்றும் புதூர்மேடு ஆகிய இடங்களில் 1.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள்;
குத்தம்பாக்கம், புறநகர் பேருந்து முனையத்தில் SETC / TNSTC பேருந்துகளுக்கு 9.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கூடுதல் வாகன நிறுத்துமிடம், சென்னை, சைதாப்பேட்டை, அம்மா பூங்காவை 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்;

கே.கே.நகரில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிவன் பூங்காவை 4.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, தாம்பரம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்லதண்ணீர் குளத்தை 5.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, அம்பத்தூர் பானு நகரில் 7.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம்; என மொத்தம் 70.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் ரூ.39.75 கோடியில் 3 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.70.70 கோடி மதிப்பீட்டில் 10 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article