
சென்னை,
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இறக்குமதி செலவைக் குறைக்கவும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
இதனைத்தொடர்ந்து, சென்னையில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களைப் பதிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் மொத்தமுள்ள 466 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட இருக்கும் நிலையில், அதில், 260 கிலோ மீட்டர் தூரம் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளில் வருகிறது. அதற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்திருந்தது.