
சென்னை,
சென்னை திரு.வி.க. நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் 15 வயது மகள், பள்ளி செல்லாமல் அப்பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்துள்ளார். அந்த சிறுமி வசித்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுவன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளார்.
சிறுவனின் காதல் விவகாரம் அவனது வீட்டிற்கும் தெரிந்திருக்கும் பட்சத்தில் சிறுமி அடிக்கடி அவன் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் தாயாரிடம் அந்த சிறுமி தனக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சிறுவனின் தாயார் சிறுமி கர்ப்பமானதை தெரிந்து கொண்டு கடந்த மார்ச் 7ஆம் தேதி, சிறுவனின் அம்மா மற்றும் சிறுவனின் அப்பா இவர்களது குடும்ப நண்பர் என மூன்று பேரும் சேர்ந்து சிறுமியை தனியார் கிளினிக்-க்கு அழைத்துச் சென்று கருகலைப்பு செய்துள்ளனர். மறுநாள் சிறுமி தனது வீட்டிற்கு சென்று தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். இதனால் சிறுமியின் தாயார் என்னவென்று கேட்டபோது சிறுமி நடந்த விவரங்களை கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தாயார் நேற்று முன்தினம் இரவு பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனான காதலன் மற்றும் அவரது தாயார், தந்தை என மூன்று பேரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்த போலீசார், சிறுவனின் தாய், தந்தை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர் மற்றும் சிறுவனின் குடும்ப நண்பர் ஒருவர் என இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.