சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் வெடிகுண்டு கடத்தப்படுவதாக மர்ம இ-மெயிலால் பரபரப்பு: விடியவிடிய நடந்த சோதனை

1 month ago 9

சென்னை: சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் வெடிகுண்டுகள் கடத்தி வரப்படுவதாக, மும்பை விமான நிலையத்திற்கு சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து மர்ம இ-மெயில் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் இரவு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கார்கோ பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அதிரடிப்படையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.

சீன நாட்டிலிருந்து இந்தியாவின் மும்பை விமான நிலையத்திற்கு வரும் சரக்கு விமானம் ஒன்றில் அபாயகரமான வெடிகுண்டுகள் கடத்தி வரப்படுவதாக, மும்பை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு மர்ம இ-மெயில் வந்தது. அதில், சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதோடு, அந்த சரக்கு விமானத்தை முழுமையாக பரிசோதிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சீனாவில் இருந்து வரும் அந்த சரக்கு விமானம், மும்பைக்கு வரவில்லை. சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறது என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் இருந்தும், டெல்லியில் இருந்தும் சென்னை விமான நிலையத்திற்கு அவசர பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்யும்படி அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலைய அவசரகால பாதுகாப்பு கமிட்டி கூட்டம், சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு அவசரமாக நடந்தது.

அதோடு சீன நாட்டிலிருந்து வரும் அந்த விமானத்தை முழுமையாக பரிசோதிப்பதோடு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யும்படி மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு துறையினர் அதிரடிப்படையினர், வெடிகுண்டுகள் சோதனைகள் நடத்தும் மோப்ப நாய் பிரிவு ஆகியவற்றுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை விமான நிலைய கார்கோ பகுதி முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

கூடுதல் அதிரடி படையினர், மோப்பநாய் வெடிகுண்டு சோதனை பிரிவினர், கார்கோ பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து சந்தேகப்படும் கார்கோ விமானத்தை தனியாக நிறுத்தி வைத்து, வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப்படை வீரர்கள், பாதுகாப்பு படையினர், மத்திய உளவுப் பிரிவினர், கியூ பிரிவு போலீசார் என்று பல்வேறு தரப்பினரும், முழுமையாக பரிசோதித்தனர். இந்த சோதனை நேற்று அதிகாலை வரை நடந்தது. ஆனால் விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை.

எனவே, இது வழக்கமாக வரும் வெடிகுண்டு புரளி தான் என்று தெரிய வந்தது.ஆனாலும் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அனைத்து சரக்கு விமானங்களையும் முழுமையாக சோதனைகள் நடத்தினர். ஆனால் எந்த விமானத்திலும் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. சென்னை விமானநிலைய கார்கோ பகுதியில், நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைகள் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது முதன்முறையாக, சரக்கு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன.

The post சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் வெடிகுண்டு கடத்தப்படுவதாக மர்ம இ-மெயிலால் பரபரப்பு: விடியவிடிய நடந்த சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article