
சென்னை விருகம்பாக்கம், கணபதிராஜ் நகர் பிரதான சாலையில் கடந்த 2 நாட்களாக பூட்டிக்கிடந்த ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்தது. பின்பக்கம் சென்று பார்த்தனர். பின்புற கதவு திறந்து கிடந்தது. போலீசார் அதன் வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அந்த வீட்டின் உள்ளே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், தலையில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் வெட்டப்பட்ட கத்தி எடுக்கப்படாமல் அப்படியே இருந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.
போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் பெயர் வெங்கடேசன் என்பதும், வக்கீல் என்பதும் தெரியவந்தது. அவர் தனது நண்பர் சேதுபதி என்பவருடன் சேர்ந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
வெங்கடேசனை வெட்டிக்கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை. அவருடன் தங்கி இருந்த நண்பர் சேதுபதி தலைமறைவாகி விட்டார். கொலையான வெங்கடேசனின் குடும்ப பின்னணி உள்ளிட்ட மற்ற விவரங்கள் தெரியவில்லை. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.