சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையத்தை தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பணிபுரியும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் இன்று கோயம்பேடு பணிமனையில் இயக்கத்துறையின் பிரத்யேக பயிற்சி மையத்தை (Operations Training Center) தொடங்கியது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், 2007-ல் நிறுவப்பட்டு, 2015-ஆம் ஆண்டு முதல் பயணிகள் சேவையைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது, நவீன தொழில் நுட்பவளர்ச்சிக்கு ஏற்ப, இந்த புதிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.
இந்த புதிய பயிற்சி மையம் 100 நபர்கள் பயிற்சி பெறக்கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், 26 கணினிகள் கொண்ட (Computer-Based Training – CBT) அறை மற்றும் 20 நபர்கள் அமரக்கூடிய கூட்டஅறை உட்பட நவீன பயிற்சி உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி மையத்தை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய முயற்சி, மெட்ரோ பணியாளர்களின் தொழில்நுட்ப அறிவையும், பாதுகாப்பு நடைமுறைகளையும், மெட்ரோ பயணிகளின் சேவைத் திறனையும் மேம்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
The post சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ பணியாளர்களுக்காக நவீன பயிற்சி மையம் தொடக்கம்..!! appeared first on Dinakaran.