சென்னை: சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக எம்பிஏ பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாநகராட்சி ஆணையர் போல போலி கையெழுத்திட்ட பணி நியமன ஆணைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம சுப்பிரமணியன். இவர் ஒஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வெங்கடாசலம்(எ)வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். எம்பிஏ பட்டதாரியான இவருக்கு அவரது தந்தை அரசு வேலை வாங்கி தர வேண்டும் என்று தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி வந்துள்ளார். அதன்படி தனது வீட்டின் அருகே வசிக்கும் பாஜக பிரமுகர் லதா என்பவரிடம் ராமசுப்பிரமணியன் தனது மகனின் வேலைக்கு சொல்லி வைத்திருந்தார். அதன்படி லதா கடந்த 2023ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி காலியாக இருப்பதாகவும் அந்த பணிக்கு உங்கள் மகனை சேர்க்கலாம். அதற்காக நீங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவரை சந்தித்து பேசுங்கள் என்று ராமசுப்பிரமணியனிடம் கூறியுள்ளார்.
அதன்படி அவர் பாஜக பிரமுகரான ஜெயச்சந்திரனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது உங்கள் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் ரூ.26 லட்சம் பணம் கொடுத்தால் மாநகராசியின் துப்புரவு ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். அதன்படி பணத்தை ஏற்பாடு செய்து தனது மகன் வெங்கடேஷ் உடன் ராமசுப்பிரமணியன் கடந்த 2023ம் ஆண்டு பாஜக பிரமுகம் ஜெயச்சந்திரன் கூறியது போல், பெரியமேடு பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்கு வந்துள்ளார். அப்போது ஜெயச்சந்திரன் மாநகராட்சி அதிகாரி என ஜோஷிதா என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். பிறகு அரசு முத்திரையிடப்பட்ட கவரில் மாநகராட்சியின் துப்புரவு ஆய்வாளர் பணிக்கான பணி நியமன ஆணையை இருவரும் ராமசுப்புரமணியிடம் வழங்கினார். அதை பரித்து பார்த்த போது, சென்னை மாநகராட்சி ஆணையரின் கையெழுத்து போடப்பட்ட பணி நியமனம் ஆணை இருந்தது. பிறகு சொன்னப்படி ரூ.26 லட்சம் பணத்தை பாஜக பிரமுகர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜோஷிதாவிடம் வழங்கினர்.
மேலும் வெங்கடேஷிக்கு தேனாம்பேட்டை மண்டலத்தில் துப்புரவு ஆய்வாளராகவும், மாதம் ரூ40 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்று பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு இல்லாமல் ஜோஷிதா தினமும் மயிலாப்பூர், மந்தைவெளி பகுதியில் குப்பைகள் சரியாக அள்ளப்பட்டுள்ளதாக என்று தினமும் போட்டு எடுத்து வாட்ஸ் அப் மூலம் தனதுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி ஜோஷிதாவுக்கு தினமும் வெங்கடேஷ் போட்டு எடுத்து அனுப்பி வந்தார். அதன்படி கடந்த ஓராண்டாக அவருக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் ஜோஷிதா மூலம் ரொக்கமாக பணம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.14 லட்சம் மதிப்புள்ள காசோலையை வெங்கடேஷிடம் ஜோஷிதா கொடுத்து இது மாநகராட்சி கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி கொடுத்துள்ளார். அந்த காசோலையை வெங்கடேஷ் தவறவிட்டுவிட்டார். இதுகுறித்து ஜோஷிதாவிடம் வெங்கடேஷ் கூறியுள்ளார். ஆனால் இது சென்னை மாநகராட்சி பணம் அதை கட்டாயம் கட்ட வேண்டும் இல்லை என்றால் வேலையில் நீக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் தற்போது தன்னிடம் ரூ.4 லட்சம் பணம் இருப்பதாகவும் அதை கொண்டு வந்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்படி ஜோஷிதா மற்றும் பாஜக பிரமுகர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேற்று பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வரழைத்தனர். அங்கு மாநகராட்சி வளாகத்தில் ஆட்டோவில் அமர்ந்தப்படி வெங்கடேஷ் மற்றும் அவரது தந்தை ராம சுப்பிரமணியனிடம் பணம் கேட்டும் மிரட்டியுள்ளர். மேலும், வெங்கடேசுக்கு உதவி ஆணையர் பணி உயர்வு வழங்குவதாகவும் அதற்கு மேலும் ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த ராமசுப்பிரமணியன் தனக்கு தெரிந்து நபர்கள் மூலம் ஜோஷிதா மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் கொடுத்த உதவி ஆணையருக்கான பணி நியமன ஆணையை மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளிடம் காட்டிய போது, அதுபோலியான பணி நியமன ஆணை என தெரியவந்தது. மேலும், பணி நியமனம் ஆணையை வழங்கி ஜோஷிதா மாநகராட்சியில் வேலை செய்யவில்லை என்றும் தெரியவந்தது. அதோடு இல்லாமல் வெங்கடேஷ் தற்போது வேலை செய்து வரும் துப்புரவு ஆய்வாளர் பணியும் போலியானது என்றும், வெங்கடேஷ் கொடுத்த பணத்தையை மாதம் மாதம் ரூ.40 ஆயிரம் ஊதியமாக கொடுத்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து சம்பவம் குறித்து ராமசுப்பிரமணியன் தனது மகனுடன் சேர்ந்து ெபரியமேடு காவல் நிலையத்தில் போலி பணி நியமன ஆணைகள் வழங்கிய ஜோஷிதா மற்றும் பாஜக பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, பாஜக பிரமுகரான ஜெயச்சந்திரன் தனது தோழியான ஜோஷிதா உடன் சேர்ந்து ஜெரக்ஸ் கடை நடத்திய வரும் ரேவதி என்பவர் மூலம் போலியான பணி நியமன ஆணைகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் போன்று போலியான கையெழுத்து, மாநகராட்சி முத்திரை தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுபோல் கடந்த 3 ஆண்டுகளில் 21 பேரிடம் பணம் பெற்று கொண்டு போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இதற்காக ஆட்களை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் லதா மற்றும் கவுரி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
அதைதொடர்ந்து போலீசார் ேநற்று அதிரடியாக பாஜக பிரமுகர் ஜெயச்சந்திரன், ஜோஷிதா, ஜெரக்ஸ் கடை உரிமையாளர் ரேவதி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான மாநகராட்சி ஆணையரின் கையெழுத்து போட்ட போலி பணி நியமன ஆணைகள், அரசு முத்திரகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகர்களான லதா மற்றும் கவுரியை போலீசார் தேடி வருகின்றனர்.
The post சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக எம்பிஏ பட்டதாரியிடம் ரூ.26 லட்சம் மோசடி; பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.