சென்னை: மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்புநிதி திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து இபிஎப் பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் சென்னை ராயப்பேட்டை இபிஎப் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இதில் சென்னை இபிஎப் பென்சன் சங்கம், அகில இந்திய இபிஎப் பென்சன் அசோசியேசன், தமிழ்நாடு பென்சன் அசோசியேசன் ஆகிய 3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.