சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

19 hours ago 2

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா, ரூ.29.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள் மற்றும் பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம், 70 சிறப்பு நூலகங்களை திறந்து வைத்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் உருவாக்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டு, நூல்கள் விற்பனைக்கான மின்வணிக இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.6.2025) பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 1.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா, பொது நூலக இயக்ககம் சார்பில் 29.80 கோடி ரூபாய் செலவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் உருவாக்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டு, தமிழ்நாடு பாடநூல் கழக நூல்கள் விற்பனைக்கான மின்வணிக இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், திறன் வகுப்பறைகள் அமைத்தல், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைத்தல், மாதிரி பள்ளிகளை உருவாக்குதல், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களோடு, அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி, சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் மாபெரும் நூலகங்கள், மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் 1.85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் திறந்து வைத்தார். இந்தப் புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியவை கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் திசைதோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட 84 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.

முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கல்விப் பணியிலும் தமிழ்ப் பணியிலும் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நூல்களை வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் எளிதில் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இணைய வழி விற்பனைக்கான மின்வணிக இணையதள வசதியையும் (www.tntextbooksonline.com) தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும், பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், 821 பொது நூலகங்களுக்கு கூடுதல் கட்டடம் கட்டுதல், தேவையான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், கணினி தொடர்புடைய சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு சிறப்பு நிதியுதவியாக 213 கோடியே 46 இலட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு நூலகக் கட்டடம் 500 சதுர அடி பரப்பளவில் என 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 352 நூலகக் கட்டடங்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 24 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள், 1 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 70 இலட்சம் ரூபாய் செலவில் 1050 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள முழுநேர கிளை நூலகத்திற்கான புதிய கட்டடம் மற்றும் பேருந்து நிலையங்கள் / மருத்துவமனைகள் / மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 49.78 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 70 சிறப்பு நூலகங்கள், என மொத்தம் 29.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு. பி. சந்தரமோகன்,இ,ஆ,ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமயம், புத்தக பதிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

The post சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article