சென்னை: பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயக்கப்படும் சுமார் 89,641 ஆட்டோக்களுக்கு கியூஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். சென்னை மாநகருக்குள் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், சென்னை போலீஸ், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களுக்கு கியூஆர் கோடு அடிப்படையிலான அவசரகால பதில் அழைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, நிகழ்நேர கண்காணிப்பு, அவசரகால பதில் வழிமுறைகள் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன வழி தளங்களுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை வழங்க, இந்த தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்துகிறது. சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89,641 ஆட்டோரிக்ஷாக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78,000 ஆட்டோரிக்ஷாக்கள் ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்ற வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக, ஒவ்வொரு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பிரத்யேக தனித்துவமான கியூஆர் குறியீட்டை உருவாக்கியுள்ளது. இந்த கியூஆர் குறியீடு 88,859 ஆட்டோரிக்ஷா, வாடகை கார்களின் ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் ஒட்டப்படும். இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்து கொள்ளலாம். அவசரநிலை ஏற்பட்டால், SOS பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது ஆட்டோரிக்ஷா தற்போது நிற்கும் இடம் மற்றும் ஆட்டோவைப் பற்றிய முழுமையான விவரங்கள், உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். கூடுதலாக, பயணிகள் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்து உடனடி உதவியை உறுதிசெய்யும் வசதியும் இதில் உள்ளது.
இப்புதிய கியூஆர் குறியீட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், SOS எச்சரிக்கை அழுத்தும்போது, பயணிகளின் சரியான இடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரியவருவதால், குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது தனி சவாரிகளின்போது காவல்துறையினரின் ரோந்து வாகனங்களின் மூலம் துல்லியமாக சம்பவ இடத்திற்கு சென்று உதவியை அணுகும் வசதியும் உள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் துறை, ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்றவற்றுடன் இணைந்து, தங்கள் அவசர எச்சரிக்கைகளை சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கிறது. இந்த வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பயன்பாடுகள் மூலம் செய்யப்படும் எந்தவொரு SOS அழைப்பும் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக அனுப்பப்படும், இதனால் காவல்துறை அதிகாரிகள் பயணிகளின் வேண்டுகோளின் பேரில் பயணத்தின் நிகழ்நேரத்தை கண்காணிக்க முடியும். அவசரநிலை ஏற்பட்டால், போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை காவலர்களால் வாகனத்தின் நிகழ்நேரத்தை கண்காணித்து, அதற்கேற்ப ரோந்து வாகனங்களின் மூலம் உதவிட முடியும். பெண்கள், குழந்தைகள் மற்றும் பெருநகரத்திற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை இப்புதிய கியூஆர் குறியீடு உறுதி செய்கிறது.
இதன்மூலம், சென்னை முழுவதும் ஒரு விரிவான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) ஆர்.சுதாகர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி ‘கியூஆர்’ குறியீடு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. வாடகை வாகனங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று செல்போனில் இருக்க கூடிய செயலிகள் மூலம் ஊபர், ஓலா, ரேபிடோ போன்றவை பயன்படுத்தி அதில் ஒப்பந்தம் செய்து அதில் பயணிக்கிறார்கள். மற்றொரு சாலையோரம் இருக்கக்கூடிய ஆட்டோ நிறுத்தம், கால் டாக்சி நிறுத்தம் மற்றும் வழியில் வரக்கூடிய வாடகை வாகனங்களில் பயணிக்கிறார்கள். அப்படி பயணம் செய்யும்போது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்காக ஒரு புதிய வசதியை பெருநகர காவல்துறை சார்பில் உருவாக்கி இருக்கிறோம். இந்த ரேபிடோ மற்றும் ஊபர் போன்ற செயலியில் புதிதாக ஒரு ‘காவல் உதவி’ வசதியை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறோம்.
அந்த வசதி மூலம் பயணிகள் ஏதாவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள காவல் உதவியை பயன்படுத்தினால் போதும், உடனே ஒரு அவசர செய்தி காவல்கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். இதற்காக தனியாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறையில் உள்ள பெரிய திரையில் சம்பந்தப்பட்ட அவசர செய்தி தெரியும். அந்த அவசர ெசய்தியில் வாகனத்தின் அனைத்து தகவல்களும் இருக்கும். ஓட்டுநர் பெயர் என்ன? முகவரி என்ன? அவரது செல்போன் எண் என்ன? அந்த வாகனம் தற்போது எங்கே செல்கிறது. என்ற அனைத்து விபரங்களும் தெரியும். அதேபோல் கியூஆர் குறியீடு, சென்னையில் மட்டும் மொத்தம் 88 ஆயிரத்து 859 வாடகை வாகனங்கள் இயங்குகிறது. அந்த வாகனங்களின் விபரங்களை போக்குவரத்து துறையிடம் இருந்து பெற்று, ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக ஒரு கியூஆர் குறியீடு உருவாக்கி உள்ளோம். அந்த ‘கியூஆர்’ குறியீட்டில் அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த க்யூ ஆர் குறியீடு பொருத்தப்பட்ட வாகனத்தில் செல்லும்போது, ஏதாவது பெண்களுக்கு பாதுகாப்புயின்மை உணர்ந்தால், அந்த கியூஆர் குறியீட்டை சம்பந்தப்பட்ட பெண் அவர்களின் செல்போனில் உள்ள கேமராவில் ஸ்கேன் செய்தால், அதில் ஒரு ‘எஸ்ஓஎஸ்’ இருக்கிறது. அதை க்ளிக் செய்த உடனே அவசர செய்தி சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும். இந்த தகவல்களை வைத்து உடனே காவல்கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர்கள் உடனே சம்பந்தப்பட்ட வாகனம் செல்லும் பகுதியில் உள்ள ரோந்து வாகனத்தை அனுப்பி, அந்த பயணிகளோடு உரையாடி என்ன பிரச்னை என்று கேட்டு தீர்வு காணுவார்கள். அதேபோல் இந்த அவசர செய்தி வரும் போது, அந்த பயணியோட செல்போன் எண்ணும் வந்துவிடும். அந்த எண்ணுக்கும் அழைத்து அவர்களின் பிரச்னை தீர்ந்துவிட்டதா, ரோந்து காவல் வாகனம் வந்ததா என்று உறுதி செய்வார்கள்.
இந்த கியூஆர் குறியீடு பயன்பாட்டால் எந்த பிரச்னையும் வராது. அதை புகைப்படம் எடுத்தாலே உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துவிடும். சம்பந்தப்பட்ட பயணி பேச வேண்டிய தேவையும் இருக்காது. இந்த கியூஆர் குறியீடு பதிவு செய்தாலே அந்த வாகனத்தின் உடைய அனைத்து தகவல்களும் வந்துவிடும். சென்னையில் நெட் ஓர்க் பிரச்னை பெரிய அளவில் இல்லை. ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் காவல்துறை சார்பில் ஒட்டப்பட்ட க்யூ ஆர் குறியீடு இல்லை என்றால், காவல்துறை வாகன சோதனையின் போது அது தொடர்பாக விசாரித்து, மீண்டும் கியூஆர் குறியீடு ஒட்ட நடவடிக்கை எடுப்பார்கள். அனைத்து வாடகை வாகனங்களிலும் இந்த கியூஆர் கோடு ஒட்ட சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உறுதி செய்வோம். அதேபோல் இந்த நடைமுறை குறித்து அனைத்து தொழிற்சங்கங்களிடமும் நாங்கள் பேசி இருக்கிறோம். அவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இவ்வாறு போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.
The post சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயக்கப்படும் 89,641 ஆட்டோக்களுக்கு கியூஆர் கோடு வசதி: புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.