சென்னை: சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய பட்ட படிப்புகளை நடத்தி வருகிறது. இவற்றில் நடப்பு ஆண்டுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழிலில் மாற்றம் விரும்புவோர், சர்வதேச மாணவர்கள், 12ம் வகுப்பு முடித்தவர்கள் என 38,000க்கும் மேற்பட்டோர் தற்போது இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
பொறியியல் அல்லாத பின்னணி கொண்டவர்கள், பணிபுரியும் பெண்கள் என 25 சதவீதத்தினர் ஆர்வமுடன் இணைந்துள்ளனர். ஜேஇஇ மெயின் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை உண்டு. மற்றவர்கள் 4 வார காலத்திற்கு ஆன்லைன் படிப்புகளை முடித்த பின்னர், நேரடி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிபெறலாம். விருப்பம் உள்ள மாணவர்கள் https://study.iitm.ac.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில்:
கேட்-2025 டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தேர்வில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகளில் 3 பேர் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மாணவர்கள். 10ம் வகுப்பில் கணிதம், ஆங்கிலம் படித்திருக்கும் எந்தப் பிரிவு (வணிகம், அறிவியல் போன்றவை) மாணவர்களும் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர முடியும். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பைப் பொறுத்தவரை 11, 12ம் வகுப்புகளில் மாணவர்கள் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
இதற்கு ஜேஇஇ தேவையில்லை. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் சேரத் தகுதி படைத்தவர்கள். சான்றிதழ், டிப்ளோமாவுடன் வெளியேறலாம் அல்லது பிஎஸ்சி அல்லது பிஎஸ் பட்டப்படிப்பைத் தொடரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post சென்னை ஐஐடியின் பிஎஸ் படிப்புகள்: மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.