சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீகாரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி வளாகம் கிண்டியில் அமைந்துள்ளது. ஐஐடியில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி வெளியூர் மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த கல்லூரியில் 20 வயது மாணவி படித்து வருகிறார். அவர் நேற்று உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்து, பின் இரவு அவர் தனியாக நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர் கட்டையைக் காட்டி மிரட்டி, முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் சத்தமிட்டு அங்கிருந்து தப்பி ஓடி காவலாளிகளிடம் கூறியுள்ளார். இதைக் கண்ட அந்த நபர், அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நிர்வாகத்தினர் சென்னை கோட்டூர்புரம் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், விசாரணைக்குப் பிறகு இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் பீகாரைச் சேர்ந்த ரோஷன் குமார் என்பது தெரிய வந்தது. இவர் ஐஐடி வளாகத்தில் இயங்கும் ‘மும்பை சாட்’ என்னும் உணவகத்தில் கடை ஊழியராக வேலை பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து ரோஷன் குமாரை கைது செய்துள்ள கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது! appeared first on Dinakaran.