சென்னை அண்ணா சாலையில் கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

2 months ago 14

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள “கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் மற்றும் பொங்கல் திருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத் தலைமைக் கைத்தறிக் கூட்டுறவுச் சங்கமாக திகழ்கிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சிறந்த தயாரிப்புகளை “கோ- ஆப்டெக்ஸ்” என்ற வணிக முத்திரை மூலம் வணிகப்படுத்தும் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்றது.

கோ-ஆப்டெக்ஸின் அனைத்து கைத்தறித் தயாரிப்புகளும் இந்திய அளவில் டெல்லி, மும்பை, கல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைந்துள்ள 150 நிலையங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டு மற்றும் பருத்தி ரக வகைகளின் பாரம்பரிய மற்றும் நாகரீக சமகால வடிவமைப்புகளைக் கொண்டு சிறந்த கைத்தறி ரகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்கின்றது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைக் காலங்களில் புதிய வடிவமைப்பு ரகங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் மனங்களை எப்போதும் கவர்ந்து வருகிறது. பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் புதுமையான கருத்துக்கள் கொண்ட வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுடன் பல மதிப்பு கூட்டப்பட்ட ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

சென்னை அண்ணாசாலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை எதிரில் பிரம்மாண்டமான கோலம் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையமானது, ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் 8,000 சதுர அடி பரப்பளவில் நான்கு தளங்களுடன் லிப்ட் மற்றும் வாகன நிறுத்தும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

முதல், இரண்டாம், மூன்றாம் தளங்கள் தலா 2,100 ச.அடி பரப்பளவிலும், நான்காம் தளம் 1, 700 ச.அடி பரப்பளவிலும் என மொத்தம் 8,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் பண்டிகை காலத்தில் ரூ.43.46 கோடி மதிப்பீட்டிலான கைத்தறி, பட்டு ரகங்கள் கோ ஆப்டெக்ஸ் மூலமாக விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டு (2025) பொங்கல் திருநாள் பண்டிகை காலத்திற்கு ரூ.50.00 கோடியாக சிறப்பு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாள் பண்டிகை சிறப்பு விற்பனையையொட்டி அனைத்து பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, கோ-ஆப்டெக்ஸ் செயலாட்சியர் தீபக் ஜேக்கப், துணைமேயர் மு.மகேஷ் குமார், நிலைக்குழுத்தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

The post சென்னை அண்ணா சாலையில் கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article