
இந்தியாவைப்பற்றி எப்போது பேசினாலும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை என்று பேசுவது உண்டு. ஆனால் கடந்த வாரம் சனிக்கிழமை வரை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ரெயில் போக்குவரத்து இருந்ததா? என்றால் இல்லை. காரணம் ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை ரெயில் பாதை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது 272 கிலோ மீட்டர் தூரத்துக்கு உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை முழுமையாக போடப்பட்டு விட்டது. இந்த வழித்தடத்தில் ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர், ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் தான். அவர் சுதந்திரத்திற்கு முன்பே இந்த திட்டத்தை செயல்படுத்த, ஆங்கிலேயர்களை வலியுறுத்தினார். ஆய்வுகள் நடந்ததே தவிர திட்டம் தொடங்கப்படவில்லை.
ஆனால் பிரதமர் இந்திராகாந்தி, இந்த ரெயில் பாதை திட்டத்திற்கு 1983-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளில் ரூ.50 கோடி செலவில் பணியினை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 13 ஆண்டுகள் ஆகியும் 11 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதை மட்டுமே போடப்பட்டது. அதற்கே ரூ.300 கோடி செலவாகி விட்டது. அதன்பின் பிரதமராக வந்த தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் இந்த திட்டத்திற்கு 1997-ம் ஆண்டு அடுத்தடுத்து அடிக்கல் நாட்டினர். அப்போது இதன் திட்ட மதிப்பீடு ரூ.2,500 கோடி ஆகும். அப்போது இந்த திட்டம் சொர்க்கத்தோடு இணைப்பு என்று வர்ணிக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் ரெயில் பாதை அமைப்பதில் ஏற்பட்ட மற்றொரு மிகப்பெரிய சிக்கல் செனாப் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது தான். எனவே அதே ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி முதலில் 2 அதிகாரிகள், 3 ஜூனியர் என்ஜினீயர்கள், 6 உதவியாளர்கள் கட்டுமான ஆய்வுக்காக ஸ்ரீநகர் ரெயில் நிலையம் இருந்த இடத்துக்கு சென்றடைந்தனர். அப்போது அங்குள்ள உள்ளூர் மக்கள் அவர்களை அதிரடி சோதனைக்கு வந்த போலீஸ் படை என்று நினைத்து கட்டுப்படுத்த முடியாத ஒரு பதற்ற நிலையை உருவாக்கினார்கள். இப்படி பல சோதனைகளை கடந்து இந்த செனாப் பாலம் பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது.
இறுதியாக 2022-ம் ஆண்டு "என்ஜினீயரிங் அதிசயம்" என்று கூறப்பட்ட உலகிலேயே மிக உயரமான ரெயில் பாலமாக செனாப் ஆற்றின் மீது கட்டிமுடிக்கப்பட்டது. செனாப் ஆற்றுக்கு மேல் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் 1.31 கி.மீ. நீளமுள்ளதாகும். இது பாரீஸ் நகரில் உள்ள ஈபிள்கோபுரத்தைவிட 35 மீட்டர் கூடுதல் உயரமானதாகும். அதன் திட்டமதிப்பீடு மட்டும் ரூ.1,400 கோடியாகும். மொத்தத்தில் இந்த 272 கி.மீ. ரெயில்பாதையின் அனைத்து பணிகளும் ரூ.44 ஆயிரம் கோடி செலவில் முடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாலம் மற்றும் வழித்தடத்தில் பிரதமர் நரேந்திரமோடி 'வந்தே பாரத்' ரெயில் போக்குவரத்தை கடந்த சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
ஜம்முவையும் காஷ்மீரையும் இணைத்ததோடு மட்டுமல்லாமல், கன்னியாகுமரி வரை ஒரு இணைப்பை இந்த புதியபாதை ஏற்படுத்திவிட்டது. இந்த 272 கி.மீ. பயணத்தில், அடர்ந்தகாடுகள், குறுகிய பள்ளத்தாக்குகள், பனிபடர்ந்த உயர்ந்த சிகரங்கள் என எழில்மிகுந்த மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே எல்லா பருவகாலங்களிலும் பயணிக்கும் மிகவும் சுகமான அனுபவத்தை நிச்சயம் பெறமுடியும். மொத்தத்தில் செனாப் பாலம் இந்தியாவின் இன்னொரு பெருமை என்று சொன்னாலும் மிகையாகாது.