செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 

4 hours ago 2

பாடாலூர்: செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இரவு அலங்கார வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 9ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. நேற்று முன்தினம் வெள்ளி மயில், குதிரை வாகனம், புஷ்ப பல்லக்கில் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. பஞ்ச மூர்த்திகளான ஏகாம்பேரஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடை அம்மனுடன், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் காமாட்சி அம்மனும் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து பிற்பகல் 2.40 மணிக்கு நாதஸ்வர இசை முழங்க, வாணவேடிக்கையுடன் தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், பொம்மனப்பாடி, சத்திரமனை, குரூர், சிறுவயலூர், இரூர், கூத்தனூர், ஆலத்தூர் கேட், பெரகம்பி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். டிஆர்ஓ வடிவேல் பிரபு, சப்-கலெக்டர் கோகுல், முன்னாள் எம்எல்ஏ.துரைசாமி, திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டி.சி.பாஸ்கர், சண்முகம், கோகிலா, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வல்லபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், ஆலத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு, கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் பாடாலூர் மற்றும் பெரம்பலூர் போலீசார், மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

இதே போல் செட்டிகுளம் மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்  appeared first on Dinakaran.

Read Entire Article