சென்னை: ‘செட்’ தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. எனினும் அத்தகைய விண்ணப்பதாரர்கள் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவி பேராசிரியர் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் நேரடி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, செட் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர்- இணை பேராசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்பதாரர்கள் செட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டதும் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். செட் தேர்வில தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர்-இணை பேராசிரியர் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ‘செட்’ தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.