
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார்.மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யா, வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படும்நிலையில், தற்போது மற்றொரு வேடத்தில் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் 'சூர்யா 45' படத்திற்கான இசைப் பணியில் சாய் அபயங்கர் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜியுடன் ஈடுபட்டு வரும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் "சூர்யா 45" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை அனகா ரவி இணைந்துள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்துள்ளார். இதற்கான புரொமோசன் நிகழ்ச்சியில் இதனை அவரே தெரிவித்துள்ளார்.