சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் ஆற்றிய உரையில்;
உலக சுற்றுச்சூழல் தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய
அமைச்சர் பெருமக்கள்
தங்கம் தென்னரசு அவர்களே,
தா.மோ. அன்பரசன் அவர்களே,
ராஜகண்ணப்பன் அவர்களே,
சட்டமன்ற உறுப்பினர்இ. கருணாநிதி அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப., அவர்களே, இயக்குநர் ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்களே, முதன்மை தலைமை பாதுகாவலர் ராகேஷ்குமார் அவர்களே, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்சீனிவாஸ் அவர்களே, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் முனைவர் ஜெயந்தி அவர்களே, அன்பிற்குரிய சுந்தர்ராஜன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே, அரசு உயர் அலுவலர்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய சகோதரர்களே, பெருந்திரளாக வந்திருக்கக்கூடிய வனத்துறையின் காவலர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
இன்று, உலக சுற்றுச்சூழல் நாள், மட்டுமல்ல, நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் இருக்கிறது என்கின்ற கடினமான உண்மையை உணர வேண்டிய நாளும் கூட! நம்முடைய குழந்தைங்களின் எதிர்காலம், இப்போது நாம் செய்யும் செயல்களைப் பொறுத்துதான் அமையும் என்ற அந்த நினைவூட்டலோடு என்னுடைய உரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
காடுகள் என்றால் வரைபடத்தில் தெரிகின்றது போல பச்சை திட்டுகள் என்று சாதாரணமாக யாரும் நினைத்துவிடக் கூடாது. காடுதான் இந்த புவி மூச்சுவிட உதவுகின்ற நுரையீரல். அந்த காடுகளை பாதுகாப்பதற்கான மனிதவளத்தின் அவசரத் தேவையை உணர்ந்து, பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த காலிப் பணியிடங்களை நிரப்பிய நம்முடைய வனத்துறை அமைச்சருக்கும், செயலாளர் உள்ளிட்ட வனத்துறை மூத்த அதிகாரிகளுக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
வனக்காவலர்கள் நியமன ஆணைகளை இன்று வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் தான் நம்முடைய காடுகளின் முதுகெலும்பு. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள்தான்! இந்தத் துறையின் அமைச்சர்களான ராஜகண்ணப்பன் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும், துறை செயலாளரான சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ். அவர்களும் இதை Just ஏதோ பொறுப்பாக பார்க்காமல், தனிப்பட்ட முறையில் ஆர்வத்தோடும் அக்கறையோடும் செயல்பட்டு நம்முடைய அரசுக்கு பெருமை சேர்க்கிறார்கள். அதற்காக, என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும் நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வேறு எந்த மாநிலத்திலும் “இத்தனை இயக்கங்கள், திட்டங்கள் இல்லை” என்று நான் அடித்து சொல்கிறேன்! அந்த அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் தொலைநோக்கோடு பல முன்னெடுப்புகளை செயல்படுத்திக்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு க்ரீன் கிளைமேட் கம்பெனி என்கின்ற, இந்தியாவின் மிகச்சிறந்த ஒருங்கிணைந்த காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆளுகை கட்டமைப்பை உருவாக்கினோம். அதன் கீழ், நான்கு முதன்மை இயக்கங்களை அமைத்திருக்கிறோம்.
முதலாவதாக, தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலமாக, 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். வனப்பரப்பை அதிகரித்திருக்கிறோம்.
இரண்டாவதாக, ‘தமிழ்நாடு ஈரநில இயக்கம்’ தொடங்கி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக ராம்சார் அங்கீகாரம் பெற்ற 21 ஈர நிலங்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று சாதனை படைத்திருக்கிறோம்.
மூன்றாவதாக, ‘தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டம்’ மூலமாக Carbon Emission-னை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை செய்து கொண்டு வருகிறோம்.
நான்காவதாக, தமிழ்நாடு நெய்தல் மீட்சி திட்டம் மூலமாக, உலக வங்கியுடன் இணைந்து 1,675 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முக்கிய கடலோரப் பகுதிகளின் தாங்குதிறனை வலுப்படுத்திக் கொண்டு வருகிறோம்.
இதுமட்டுமல்ல, கடந்த 4 ஆண்டுகளில், 7,000 ஹெக்டேருக்கும் அதிகமான 65 புதிய வன காப்பகங்களுக்கு அறிவிக்கை செய்து, சட்டப்பூர்வ பாதுகாப்பு அளித்திருக்கிறோம். அகத்தியமலை யானைகள் காப்பகம், தெற்கு காவிரி வனவிலங்கு காப்பகம், தந்தை பெரியார் வன உயிரின காப்பகம், கடவூரில், இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம், நஞ்சராயன் பறவைகள் காப்பகம், கழுவேலி பறவைகள் காப்பகம் மற்றும் இந்தியாவின் முதல் “கடற்பசு காப்பகம்” ஆகிய 7 வன உயிரின சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி வலையமைப்பின்கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்போது நான் சொல்லியிருக்கும் அனைத்தும் ஒவ்வொரு வகையில் ஒரு ரெக்கார்டு!
2 ஆயிரத்து 403 ஹெக்டேர் பரப்பளவில், புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கி இருக்கிறோம். 1,207 ஹெக்டேர் தரங்குன்றிய சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுத்திருக்கிறோம். முக்கியமான “நீல கார்பன்” சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு புத்துயிர் வழங்கியிருக்கிறோம். இந்த வரிசையில், மன்னார் வளைகுடாவில் இருக்கும் தனுஷ்கோடியில், தமிழ்நாட்டின் முதல் கிரேட்டர் ஃபிளமிங்கோ சரணாலயம் குறித்த அரசு அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமையடைகிறேன்.
பல்லுயிர்ப் பெருக்கம், காலநிலை மாற்றம் – இந்த இரண்டுக்கும் இடையில் வலுவான தொடர்பு இருக்கிறது. இதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டு வரும் முன்னோடி மாநிலமாக இருப்பது நம்முடைய தமிழ்நாடுதான்!. யானைகள் மற்றும் புலிகள் போன்ற காடுகளின் ஆதாரமான உயிரினங்களைப் பாதுகாப்பதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். மற்றொருபுறம் அதிகம் அறியப்படாத மற்றும் அருகி வரக்கூடிய உயிரினங்களை, “தமிழ்நாடு அருகிவரும் உயிரினங்கள் நிதியத்தின்” மூலம் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தொடக்கத்திலேயே நாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியைப் பற்றி சொன்னேன். அரசாங்கம் செயல்படுத்துகின்ற திட்டங்களால் மட்டும் இந்த நெருக்கடியைத் தீர்த்துவிட முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்கவேண்டும்! அதனால்தான், தொழில்களுக்கான “தன்னார்வ பசுமை மதிப்பீட்டை” அறிமுகப்படுத்தி இருக்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்கின்ற பொறுப்புணர்ச்சி, தொழில்துறை வளர்ச்சியின் மையமாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கின்ற செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சி இலக்கோடு இணைந்து செயல்பட முடியும்!
நம்முடைய கனவு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மட்டும் கிடையாது – அது ஒரு பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த மாற்றத்தை வழி நடத்துவதற்கான கருவிகள், வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளை நம்முடைய இளைஞர்களுக்கு வழங்க முதலமைச்சரின் பசுமை தோழர்களின் முதல் பேட்ச், இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறார்கள். இரண்டாவது பேட்ச் விரைவில் இணைவார்கள். முதல் பேட்ச் தொடங்கிய பணிகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள்.
இந்த ஆண்டிலிருந்து, நம்முடைய தனித்துவமான உயிரினங்களின் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ச்சியாக புதிய பாதுகாப்பு மையங்கள் நிறுவப்படும். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பசுமைச் சான்றிதழ் பெறும் கட்டிடமாக இது உருவாகும்.
2021-ஆம் ஆண்டு, பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராட “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தை தொடங்கினோம். இது அரசின் திட்டமாக இருந்தால் போதாது! மக்கள் இயக்கமாக மாறவேண்டும்! அரசாங்கம் திட்டங்களை கொண்டுவர தான் முடியும். அதன் வெற்றி மக்கள் தங்களின் அன்றாட பழக்கங்களை மாற்றிக்கொள்வதில்தான் இருக்கிறது. தொடக்கத்தில் கஷ்டமாகதான் இருக்கும். ஆனால், வேறு வழி இல்லை. இந்த ஆண்டு சுற்றுச்சூழல் நாளின் ‘தீம்’ – “நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம்” என்பதுதான்.
இன்றைக்கு பிளாஸ்டிக் மாசுபாடு நம்முடைய பூமியை மூச்சுத் திணற வைத்துக்கொண்டு இருக்கிறது. வெளியே புறப்பட்டால், செல்போனை சார்ஜ் செய்துவிட்டுதான் எல்லோரும் புறப்படுகிறோம். அதுபோல, மறக்காமல் துணிப்பை மற்றும் தண்ணீர் பாட்டில் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே புறப்படமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இந்த சிறிய செயல் நம்முடைய கூட்டுமுயற்சிக்கு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
இன்றைய நாள், கடல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான பரப்புரையை விரிவுபடுத்துகிறோம். மேலும், தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களிலும் ‘கைவிடப்பட்ட’ மீன் வலைகளை அகற்றும் முயற்சியும் தொடங்கப்படுகிறது. ‘தூய்மை மிஷன் – இது குப்பை மேட்டர் இல்லை’-என்று ஒரு இயக்கத்தை தொடங்கப் போகிறோம் என்று சமூக ஊடகங்களில் அறிவித்திருக்கிறோம்.
இந்தியா ஏன் அமெரிக்கா போன்று இல்லை? ஜப்பான் போன்று இல்லை? ஐரோப்பா போன்று இல்லை? என்று நிறைய சினிமாவில் கேள்வி கேட்பார்கள். அது போன்று ஆகவேண்டும் என்றால், அந்த மக்களுக்கு இருக்கக்கூடிய சுய ஒழுக்கம் நமக்கும் இருக்க வேண்டாமா? அதற்கான முதல்படிதான் குப்பைகளை தரம் பிரித்து போடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற இந்த தூய்மை மிஷன்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அரசு அறிவிக்கின்ற அறிமுகப்படுத்தும் திட்டங்களை உங்கள் சொந்த திட்டமாக நினைத்து நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். நம்முடைய அரசை பொறுத்தவரை தீர்வுக்காக (solution) காத்திருப்பவர்கள் இல்லை. தீர்வை உருவாக்குகின்றவர்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டும் என்றால், நாம் தான் தீர்வு! நம்முடைய திராவிட மாடல் அரசு, சமூக நீதிக்கான அரசு மட்டுமல்ல, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்! அதற்கு மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு, விடைபெறுகிறேன்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள்தான் வனக்காவலர்கள்; மஞ்சப்பை திட்டம் மக்கள் திட்டமாக மாற வேண்டு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.