சீனா வழங்கிய வான் பாதுகாப்பு சாதனங்களை தவிடுபொடியாக்கிய இந்தியா: மத்திய அரசு அறிக்கையில் தகவல்

1 month ago 5

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ந்தேதி சுற்றுலாவாசிகளை இலக்காக கொண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி உள்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இந்திய ஆயுத படைகள் கடந்த 6-ந்தேதி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளையும், பயங்கரவாதிகளையும் குறி வைத்து தாக்கியது.

இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அவற்றை இந்தியா முறியடித்து அதில் வெற்றியும் பெற்றது.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், இந்திய சொத்துகளுக்கு இழப்பு ஏதுமின்றி அனைத்து தாக்குதல்களும் நடத்தி முடிக்கப்பட்டன. இது நம்முடைய கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் தாக்குதல் அமைப்பு ஆகியவற்றின் திறனை சுட்டி காட்டுகிறது.

தொலைதூர டிரோன்களில் இருந்து வழிகாட்டு சாதனங்களுடன் கூடிய வெடிபொருட்கள் என நவீன உள்நாட்டு தொழில் நுட்பத்தின் பயன்பாட்டால், அதிக திறன் வாய்ந்த முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. குடிமக்கள் மற்றும் ராணுவ தளங்களை இலக்காக கொண்ட பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்தது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு அல்லது சர்வதேச எல்லையை அத்துமீறாமல் பாகிஸ்தானின் உள்ளே இருந்த பயங்கரவாத தொடர்புடைய இலக்குகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ராணுவ சுயசார்பு தன்மையை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தில் இரு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்திய விமான படையானது, பாகிஸ்தானிடம் இருந்த சீனா விநியோகித்த வான் பாதுகாப்பு சாதனங்களிடம் சிக்காமல், அதனை செயலிழக்க செய்து மற்றும் அதனை தவிர்த்து விட்டு, உள்ளே சென்று 23 நிமிடங்களில் தாக்குதலை முடித்துள்ளது என மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்தியாவின் சொத்துகள் அனைத்தும் பாதுகாப்பாக திரும்பி விட்டன என்றும் தெரிவித்து உள்ளது.

பி.எல்.-15 ஏவுகணைகள் (சீன தயாரிப்பு), யிஹா அல்லது யீஹா என பெயரிடப்பட்ட துருக்கியில் தயாரான ஆளில்லா விமானங்கள், தொலைதூர ராக்கெட்டுகள், குவாட்காப்டர்கள் மற்றும் வர்த்தக டிரோன்கள் ஆகியவற்றின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளன.

இவை கைப்பற்றப்பட்டு அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதனால், வெளிநாடுகள் விநியோகித்த நவீன ஆயுதங்களை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தபோதும், இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் போருக்கான மின்னணு நெட்வொர்க்குகள் தொடர்ந்து உயர்ந்த வகையில் செயல்பட்டு அவற்றை முறியடித்து உள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Read Entire Article