டெல்லி: இந்தியா – சீனா இடையிலான லடாக் எல்லைப் பிரச்னை நீடித்து வரும் சூழலில், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீனாவின் துணைத் தலைவர் ஹான் உடனான சந்திப்பிற்குப் பிறகு, ‘இந்தியா-சீனா இடையேயான உறவு, கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடந்த சந்திப்புக்குப் பிறகு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது’ என்று கூறினார். ஒன்றிய அமைச்சரின் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சீனா விவகாரம் குறித்த விரிவான விவாதத்திற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறோம்.
கடந்த 1962ல் இந்தியா மீது சீனா படையெடுத்த நெருக்கடியான காலகட்டத்திலேயே, நாட்டின் எல்லைப் பாதுகாப்பு நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிந்தது என்றால், இப்போது ஏன் விவாதிக்க முடியாது? உலகின் முன்னணி உற்பத்தி சக்தியாகவும், இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகவும் சீனா உருவெடுத்துள்ளதால், அதனால் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தேசிய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது அவசியம்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா – சீனா உறவு மேம்படுவதாகக் கூறும் நிலையில், எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை ஒன்றிய அரசு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாவிட்டால், நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
The post சீனப் போரின் போதே விவாதம் நடந்த நிலையில் எல்லை நிலவரம் குறித்து விவாதிக்க இப்போது மோடி அரசுக்கு தயக்கம் ஏன்?… நாடாளுமன்றத்தை முற்றுகையிட காங்கிரஸ் திட்டம் appeared first on Dinakaran.