சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளக்காடாவர் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராமன், செல்லம்மா தம்பதியின் மகன் ஐயாசாமி. இவர் சிவகங்கையில் இயங்கி வரும் அரசு கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். ஐயாசாமயின் தந்தை சிறுவயதிலேயே இறந்ததால் அவரது தாய் செல்லம்மா ஐயாசாமியின் சித்தப்பாவை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். அத்தகைய கிராமத்தில் இந்த குடும்பம் சற்று வசதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதை மற்ற சமூகத்தை சேர்ந்த ஒரு சில இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை. இவர்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஐயாசாமியின் சித்தப்பா பூமிநாதன் புல்லட் வாங்கி உள்ளார். அந்த புல்லட்டை இளைஞர்கள் இருவர் அடித்து உடைத்தனர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நேற்றைய தினம் ஐயாசாமி கல்லூரியிலிருந்து வரும் போது 3 இளைஞர்கள் வழிமறித்து கீழ் ஜாதியில் பிறந்து எப்படி இந்த வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ என கூறி அவரின் கைகளை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அங்கிருந்து அவர் உயிர்பிழைத்து பெற்றோரிடம் சென்றுள்ளார், பெற்றோர் அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு கை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. ஐயாசாமி குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அந்த இளைஞர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று சரமாரியாக தாக்கி வீட்டை சூறையாடினர். இச்சம்பவம் தொடர்பாக 3 பேரையும் சிப்காட் காவல்துறையினர் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
The post சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சாதி வெறியால் இளைஞரின் கைகள் வெட்டப்பட்ட கொடூரம்..!! appeared first on Dinakaran.