கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு அடுத்த ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது.மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜ தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில்,கொல்கத்தாவில் நேற்று நடந்த பாஜ தலைவர்கள் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்திப்படுத்த ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்பு சட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார்.
ஆபரேஷன் சிந்தூரை விமர்சிப்பதன் மூலம் நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளின் உணர்வுகளை அவமதிக்கிறார். ராணுவ நடவடிக்கையை எதிர்ப்பவர்களுக்கு குங்குமத்தின் மதிப்பு குறித்து வரும் தேர்தலில் பெண்கள் பாடம் புகட்ட வேண்டும். வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து ஏப்ரல் மாதத்தில் கலவரம் நடந்தது. முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரம் மாநில அரசால் தூண்டி விடப்பட்டது. மம்தா கட்சி தலைவர்கள் பலருக்கு இந்த கலவரத்தில் தொடர்பு உள்ளது. முர்ஷிதாபாத்தில் எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) வீரர்களை அனுப்புவது பற்றி ஒன்றிய அரசு கேட்டதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. கலவரம் தொடர்ந்து நடப்பதற்காகவே திட்டமிட்டு பிஎஸ்எப் வருவதற்கு மம்தா தடை போட்டார். பிஎஸ்எப் வீரர்களை அனுமதித்திருந்தால் இந்துக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.
மேற்கு வங்க தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதோடு நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். மேற்கு வங்க எல்லைகள் திறந்து கிடப்பதால் வங்கதேசத்தினரின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் தடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
The post சிறுபான்மையினர் வாக்கு வங்கியை திருப்திப்படுத்த ஆபரேஷன் சிந்தூர், வக்பு சட்டத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.