
புதுடெல்லி,
சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை பாஜக அரசாங்கம் பறித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நாட்டின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை இளைஞர்களின் உதவித்தொகையை உங்கள் (பாஜக) அரசாங்கம் பறித்துள்ளது.
இந்த வெட்கக்கேடான அரசாங்க புள்ளிவிவரங்கள், மோடி அரசாங்கம் அனைத்து உதவித்தொகைகளிலும் பயனாளிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய குறைப்புகளைச் செய்தது மட்டுமல்லாமல், சராசரியாக ஆண்டுதோறும் 25 சதவீதம் குறைவான நிதியையும் செலவிட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
நாட்டின் பலவீனமான பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்புகள் பெறாவிட்டால், அவர்களின் திறன்கள் ஊக்குவிக்கப்படாவிட்டால், நம் நாட்டின் இளைஞர்களுக்கு எப்படி வேலைகளை உருவாக்க முடியும்?
"அனைவருக்குமான வளர்ச்சி" என்ற உங்கள் முழக்கம் ஒவ்வொரு நாளும் பலவீனமான பிரிவுகளின் விருப்பங்களை கேலி செய்கிறது! என பதிவிட்டுள்ளார்.