
லீட்ஸ்,
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கே.எல். ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளைக்கு முன்பு வரை இந்திய அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் அடித்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் 42 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
முன்னதாக ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் கூட்டணி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய அவுட் சைடு ஆப் பந்துகளை சிறப்பாக எதிர் கொண்டனர். இதனை வர்ணனையில் ஈடுபட்டிருந்த இந்திய முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டினார். அதுமட்டுமின்றி அவுட் சைடு ஆப் பந்துகளில் தடுமாறி விக்கெட்டை பறிகொடுத்த முன்னாள் வீரரான விராட் கோலியை விமர்சித்தார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நீங்கள் பார்க்கும் பல விஷயங்கள் இந்த 2 பேட்ஸ்மேன்களால் உருவாக்கப்படுகின்றன. அவர்களுக்கு என் பாராட்டுகள். அந்த பந்து வீச்சில் (அவுட் சைடு ஆப் பந்துகள்) சிக்கி தடுமாறிய ஒரு முன்னாள் பேட்ஸ்மேனை (விராட் கோலி) நாங்கள் அறிவோம். ஆனால் இந்த இருவரும் அப்படி இல்லை" என்று கூறினார்.