சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் தமிழாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதல்கட்டமாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும், தமிழ் மொழியை கட்டாய பாடமாகக் கற்பிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தமிழ் கற்றல் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர வாரியங்களின் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழை எளிமையாகவும், விருப்பமாகவும் படிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் பணிபுரியும் 6 ஆயிரம் தமிழாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
அந்த வகையில், முதல்கட்டமாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.