டேராடூன்: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் நிஷாங்கின் மகள் ஆருஷி நிஷாங்கிடம் படத்தயாரிப்பாளர்கள் ரூ. 4 கோடி மோசடி செய்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், ஒன்றிய அமைச்சருமான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பாஜவை சேர்ந்தவர். இவரது மகள் ஆருஷி நிஷாங்க். ஆருஷி நிஷாங்க் மும்பையை சேர்ந்த பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களான மான்சி வருண் பாக்லா மற்றும் வருண் பிரமோத் குமார் பாக்லா ஆகியோர் மீது பண மோசடி புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆருஷி நிஷாங்க் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், “மான்சி வருண் பாக்லா மற்றும் வருண் பிரமோத் குமார் பாக்லா இருவரும் தாங்கள் தயாரிக்கும் ஒரு இந்தி படத்தில் எனக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதாக கூறினர். மேலும் படத்தின் வருமானத்தில் எனக்கு பெரியளவில் பங்கு தருவதாக சொல்லி அந்த படத்தில் என்னை ரூ.5 கோடி முதலீடு செய்யும்படி சொன்னார்கள். அதை நம்பி முதலில் அவர்களுக்கு ரூ.4 கோடி தந்தேன்.
ஆனால் அவர்கள் சொன்னபடி படத்தில் எனக்கு வாய்ப்பு தரவில்லை. அதனால் பணத்தை திருப்பி கேட்டபோது பணம் தர மறுத்து, எனக்கு மிரட்டல் விடுத்தனர்” என தெரிவித்துள்ளார். ஆருஷி நிஷாங்க் அளித்த புகாரின் அடிப்படையில் மான்சி வருண் பாக்லா மற்றும் வருண் பிரமோத் குமார் பாக்லா ஆகியோர் மீது மிரட்டி பணம் பறித்தல், ஏமாற்றுதல், பண மோசடி செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆருஷி நிஷாங்கின் புகாருக்கு தயாரிப்பாளர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
The post சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி உத்தரகாண்ட் மாஜி முதல்வரின் மகளிடம் ₹4 கோடி மோசடி: படத்தயாரிப்பாளர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.