சித்தூர்,
திருச்சியை சேர்ந்த 40 பேர் தனியார் பேருந்தில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு இரவில் திருச்சி திரும்பி கொண்டிருந்தனர். சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.