சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டாக்டருக்கு போலீஸ் வலைவீச்சு

5 hours ago 3

திருப்பூர்,

திருப்பூர் பி.என்.ரோடு பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண் பல் சம்பந்தமான பிரச்சினைக்கு குமார் நகர் பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவரின் அறிவுரைப்படி 15 நாட்களுக்கு ஒரு முறையும் அந்த பெண் பல் மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையில் கடந்த 15-ந்தேதி சிகிச்சைக்காக அந்த இளம்பெண், பல் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பல் டாக்டர் ஸ்டீபன் (வயது 40) அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அந்த பெண் தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். மேலும் இதுகுறித்து கொங்குநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பல் மருத்துவரான ஸ்டீபன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதற்குள் அவர் தலைமறைவானார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Read Entire Article