ஊட்டி : சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஊட்டியில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன பேரணி நடந்தது.
சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம், விபத்துகளை குறைக்க எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் மாவட்ட காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட எஸ்பி நிஷா பங்கேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் ெஹல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி பேரணியில் கலந்து கொண்டார். இந்த பேரணியில் கோவை மாவட்டத்திலிருந்து தனியார் கிளப்களை சேர்ந்த சுமார் 40 இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 80 காவலர்கள் கலந்து கொண்டனர்.
பிங்கர்போஸ்ட்டில் துவங்கி ரோகினி சந்திப்பு, ஹில்பங்க், கலெக்டர் அலுவலகம், சேரிங்கிராஸ், ஆவின் வழியாக லவ்டேல் சந்திப்பு வரை சுமார் 7 கிமீ தூரத்திற்கு இப்பேரணி நடந்தது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் ஹெல்மெட்களை மாவட்ட எஸ்பி நிஷா வழங்கினார்.
அவர்களிடம் ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைக்கவசம் கொடுத்து தலை கவசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இருசக்கர வாகனம் ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதன் மூலம் எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளின்போது தலையில் அடிபடாமல் தப்பிக்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது. மது அருந்தி விட்டும், செல்போன்களில் பேசி கொண்டும் செல்லக்கூடாது. ஓட்டுநர் உரிமமின்றி வாகனங்கள் இயக்கக்கூடாது.
குறிப்பாக 18 வயதிற்கு குறைவாக உள்ள சிறுவர்கள் இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது. ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் ஊட்டி டவுன் டிஎஸ்பி நவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன பேரணி appeared first on Dinakaran.