வெள்ளப்புத்தூர்-கரிக்கிலி இடையே அமைந்துள்ள 3.19 கி.மீ. சாலையை சீரமைக்க, முதல்வர் கிராம சாலை திட்டத்தில் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சாலையை சீரமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வனத்துறை ஒப்புதல் வழங்காமல் தாமதப்படு்த்துவதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் அடுத்த வெள்ளப்புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரதான சாலையை பயன்படுத்தி, கரிக்கிலி மற்றும் வெள்ளப்புத்தூர் ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் பணிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், வேடந்தாங்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள கரிக்கிலியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தை மேற்கண்ட சாலையில் பயணித்து, நேரில் சென்று பார்வையிடும் நிலை உள்ளது.