மும்பை,
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கெரியரின் இறுதி கட்டத்தில் இருக்கும் இருவரும் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகின்றனர். இதனால் இந்த தொடரில் எழுச்சி பெற்று கோப்பையை வென்று கொடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்தும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்தும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மனம் திறந்து சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ரோகித் மற்றும் விராட் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கும் மிகுந்த மதிப்பைச் சேர்க்கிறார்கள். அவர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு பெரிய பங்கை வகிக்க வேண்டும். நான் முன்பே சொன்னேன், அந்த வீரர்கள் ரன் அடிக்க வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்கள். நாட்டிற்காக விளையாடவும், நாட்டிற்காக பங்களிக்கவும் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது.
23-ம் தேதி நடைபெற உள்ள போட்டிதான் (பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி) எங்களுக்கு மிக முக்கியமான போட்டி என்று நினைத்து நாங்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்லவில்லை. அனைத்து ஆட்டங்களும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். துபாய்க்குச் செல்வதன் நோக்கம் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதுதான், ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தை மட்டும் வெல்வது அல்ல.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்கு நடுவில் ஒரு ஆட்டம் என்றால், அதை முடிந்தவரை தீவிரமாக எடுத்துக் கொள்ள முயற்சிப்போம். இருப்பினும் இந்தியா - பாகிஸ்தான் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும்போது, உணர்ச்சிகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அதனை பேட்டிற்கும் பந்திற்கும் இடையேயான போட்டியாக மட்டுமே பார்க்கிறேன்" என்று கூறினார்.