
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்18 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தோல்விக்கு இந்திய அணி பழி தீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.