'சாம்பார் சுவையாக இல்லை' என கணவர் தகராறு: மனவேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு

1 day ago 1

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா விசுவநாதபுரா பகுதியை சேர்ந்தவர் நாகரத்னா (வயது 38). திருமணமான இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சாப்பிடும்போது கணவர் மற்றும் குழந்தைகள், நாகரத்னா வைத்த சாம்பார் சுவையாக இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் நாகரத்னா, அவரது கணவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த நாகரத்னா கணவர், குழந்தைகள் தூங்கிய பின் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை மின்விசிறியில் நாகரத்னா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்த கணவர் மற்றும் குடும்பத்தினர் இதுகுறித்து விசுநாதபுரா போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் நாகரத்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவனஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கணவர் மற்றும் குழந்தைகள் ஆகியோர் நாகரத்னாவிடம் சாம்பார் சுவையாக இல்லை என கூறி தகராறு செய்தனர். இதனால் மனம் உடைந்த நாகரத்னா தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

ஆனால் இதற்கு நாகரத்னாவின் பெற்றோர், தங்களது மகளை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், இந்த தகராறில் நாகரத்னாவை அவரது கணவர் கொலை செய்து தூக்கில் பிணத்தை தொங்கவிட்டுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article