
சாத்தூர்,
சாத்தூர் அருகே தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் தீப்திஜெயின் (வயது 45). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை படந்தால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் இரவில் தீப்பெட்டி ஆலையில் இருந்து புகை வெளியானது. இதைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உள்ளே சென்று பார்த்ததில் ஆலை முழுவதும் தீ பரவியது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பண்டல்கள், 20-க்கும் மேற்பட்ட மருந்துடன் கூடிய தீக்குச்சி மூடைகள் முழுவதும் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.