
சென்னை,
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில், அவரின் தலைமையில் இன்று (ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்தநிலையில் இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில்,
மிகவும் அவசியமான சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க மறுத்து, தாமதப்படுத்தி வந்த மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து இறுதியாக வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எப்போது நடத்துவீர்கள்? எப்போது முடிப்பீர்கள்? சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை.
பீகார் தேர்தலில் சமூக நீதி பிரச்சினை முன்னெடுக்கப்படும் சூழ்நிலையில் அரசியல் காரணத்திற்காக இதனை அறிவித்து உள்ளனர். முன்பு, சாதி அடிப்படையில் மக்களை பிரிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டி, இழிவுபடுத்திய இதே பிரதமர், இப்போது அதே கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உள்ளார்.
சாதி வாரி கணக்கெடுப்பு என்பது கொள்கை முடிவு எடுக்கவும், மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளவும், சமூக நீதி அளிக்கவும் மிகவும் அவசியமானது. பாதிப்பு எந்தளவு என்பதை அறியாமல், அநீதிகளுக்கு நிவாரணம் அளிக்க முடியாது. தமிழக அரசுக்கும், தி.மு.க.வுக்கும் இது ஒரு கடின உழைப்பால் கிடைத்த வெற்றியாகும். சட்டசபையில், சாதிவாரி கணக்கெடுப்பு கோரி முதன்முதலாக நிறைவேற்றியது நாம் தான். ஒவ்வொரு மன்றத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம்.
ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும்போதும், கடிதம் எழுதும் போதும் இந்த கோரிக்கை குறித்து வலியுறுத்தப்பட்டது. மற்ற அனைவரும் மாநில அளவிலான சாதி வாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்திய நிலையில், கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நாம் உறுதியாக இருந்தோம்.
சட்டப்பூர்வமான சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும். இப்போது, நமது நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.