கோபால்பட்டி : சாணார்பட்டி அருகே நடைபெற்ற சலங்கை எருது விடும் விழாவில் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.சாணார்பட்டி அருகே உள்ள மருநூத்து ஊராட்சி கோட்டைப்பட்டியில் பெய்யில்தாத்தன் சாமி கும்பிடு திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
முன்னதாக கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தேவராட்டம், சேர்வை ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கும்மி கோலாட்டத்துடன் கோயில் வீட்டிலிருந்து விழாக்கூடை எடுத்து கோயில் சென்றடைதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று மாலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சலங்கை எருது ஓட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், கரூர், திருச்சி, மணப்பாறை, குஜிலியம்பாறை, தேனி, கம்பம் ஆகிய பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
இதில் பங்கேற்ற இளைஞர்கள் சட்டை அணியாமல் பாரம்பரிய முறைப்படி கையில் குச்சியுடன் தலைப்பாகை அணிந்திருந்தனர். பின்னர் இளைஞர்களின் ஆரவாரத்துடன், உறுமி மேளம் முழங்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் எருது ஓட்டம் நடைபெற்றது. மாடுகளை கையில் குச்சியுடன் விரட்டியபடி, புழுதி பறக்க இளைஞர்கள் ஓடி வந்தனர்.
இதில் வெற்றிபெற்ற மாட்டுக்கு தங்க காசு, 2வது இடம் பிடித்த மாட்டிற்கு வெள்ளிக்காசு அதனைத் தொடர்ந்து வரிசையாக வந்த மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம், கரும்புகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டன. இந்த சலங்கை எருது ஓட்டத்தினை காண கோட்டைபட்டி, மருநூத்து, ஜோத்தாம்பட்டி, மணியக்காரன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
The post சாணார்பட்டி அருகே சலங்கை எருது விடும் விழா appeared first on Dinakaran.