
ராய்ப்பூர்,
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
அதன்படி நடைபெற்ற நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக லெண்டில் சிம்மன்ஸ் 57 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 74 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக இந்த ஆட்டத்தின் 13-வது ஓவரை வீசி முடித்த வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான டினோ பெஸ்ட் ஓய்வறைக்கு திரும்ப செல்ல முயன்றார். அதைப் பார்த்த யுவராஜ் சிங் 1-2 ஓவர்களுக்கு முன்பாக பெவிலியனிலிருந்து வந்த டினோ பெஸ்ட் மீண்டும் எப்படி பெவிலியன் திரும்பலாம்? என்று நடுவரிடம் புகார் செய்தார்.
இதனால் கோபமடைந்த டினோ பெஸ்ட், யுவராஜ் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யுவராஜ் சிங்கும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட சக வீரர்கள் மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து இருவரையும் சமாதானப்படுத்தினர்.