சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது; அன்புமணி மீது மீண்டும் ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு: நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்

23 hours ago 3

திண்டிவனம்:பாமகவில் நிலவும் பிரச்னை சம்பந்தமாக சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது. அன்புமணி அமைதி காத்திருந்தால் அதிகாரம் தானாக வந்திருக்கும். அவர் மாவட்ட செயலாளர்களை என்னை சந்திக்கவிடாமல் செய்து என்னை மானபங்கம் செய்துவிட்டார். என்மீது நம்பிக்கை வைக்காததால் இயற்கையான கோபம் கொஞ்சம் பொங்கி எழுந்து நீயா.. நானா… என பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். ஒவ்வொரு செங்கல்லாக பார்த்துப் பார்த்துக் கட்டிய பாட்டாளி மக்கள் கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்ற அளவுக்கு அவர்களது செயல்பாடுகள் இருந்தன என அன்புமணி மீது ராமதாஸ் மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் உச்சகட்டத்தில் உள்ளது. சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, ராமதாஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுவரை 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்களை புதிதாக நியமித்துள்ளார். பொருளாளர் திலகபாமா, சமூக நீதிப்பேரவை தலைவர் வக்கீல் பாலு உள்ளிட்ட அன்புமணியின் நெருங்கிய ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகளையும் அடுத்தடுத்து நீக்கி தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்.

ராமதாசின் இந்த தடாலடி நடவடிக்கைகளை சமாளிக்க ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி தொண்டர்களை சந்திக்கும் முடிவுக்கு வந்துள்ளார் அன்புமணி. ராமதாசுக்கு வயதாகிவிட்டதால் தைலாபுரம் தோட்டத்திலிருந்தவாறே கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார். முன்புபோல அவரால் களத்துக்கு செல்ல முடியாது என்பதால் தான், அவர் நிர்வாகிகளை வரவழைத்து எல்லா கூட்டங்களையும் தைலாபுரத்திலே நடத்தி வருகிறார். இதனால் தந்தையின் அரசியல் பாணியை பின்பற்றி, ஒவ்வொரு மாவட்டமாக களஆய்வுக்கு நேரில் சென்று தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட அன்புமணி திட்டமிட்டுள்ளார். தன்னால் தான் கட்சியை துடிப்புடன் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும், எந்த சூழ்நிலையிலும் நேரம் காலம் பார்க்காமல் தன்னால்தான் போராட முடியும் என கட்சிக்காரர்களுக்கு உணர்த்தவே அவர் மாவட்ட பொதுக்குழு கூட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். முதலில் 10 வருவாய் மாவட்டங்களில் ஜூன் 15ம்தேதியான ராமதாஸ் பிறந்த நாள் அன்று தொடங்கி அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று பொதுக்குழு கூட்டத்தை நடத்த உள்ளார்.

ஆனால் அதற்கு முன்பாக பாமக பொதுக்குழுவை கூட்டி, கட்சியிலும் மற்றும் கூட்டணி விவகாரத்திலும் சில முக்கிய முடிவுகளை எடுக்க அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் முடிவு செய்து விட்டதாகவும், இதுதொடர்பான அறிவிப்புகள் 12ம்தேதி (இன்று) செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தைலாபுரம் வட்டாரத்தில் தகவல் பரவின. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கும், செயல் தலைவருக்கும் போய்க் கொண்டிருக்கிற பிரச்னைகள் முழுசும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. 2 பேரின்(ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி) சமரச பேச்சுவார்த்தை பலனின்றி ஒரு டிராவுக்கு வந்தது. இதற்கு முன்பாக நடந்த 14 பஞ்சாயத்துக்களால் நான் தொடங்கிய 34 அமைப்புகளில் இருந்து வந்து எனக்கு பஞ்சாயத்து பண்ண வந்தார்கள். இதுதான் தலைவிதி என்று அதையும் ஏற்றுக் கொண்டேன். இவர்கள் அனைவரும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள்.

அவர் மக்களை பார்த்து கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தீர்ப்புதான். 14 பஞ்சாயத்தோடு வந்த மற்றொரு நபர் பஞ்சாயத்துக்கு வந்தார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என கூறினேன். அதற்காக கௌரவ தலைவர், சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் நீங்கள் போய் பார்த்துவிட்டு வாருங்கள்.. (மாநாட்டுக்கு 15 நாட்களுக்கு முன்பு), பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன் என சொல்லி அனுப்பினேன். அவர்களும் காலையில் உங்களை பார்க்க வருகிறோம் என்று அன்புமணியிடம் சொன்னார்கள். ஆனால் வரவேண்டாம், போனில் சொல்லுங்கள் என கூறியுள்ளார். அய்யா மாநாடு மேடையிலேயே எழுதி கொடுக்கிறார் என்று சொல்கிறார் என்று கூறியபோது அவரை நம்ப முடியாது என தெரிவித்துள்ளார். நான் தயாராக இருந்தும் அப்படி நடந்தது. அதன்பிறகே என்னுள் இருக்கின்ற இயற்கையான கோபம் கொஞ்சம் பொங்கி எழுந்து நீயா.. நானா… என பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். இப்போது உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அதுமட்டுமல்ல எல்லாம் எனக்கே வேண்டும், ராமதாஸ் பெயரைத்தானே பின்னால் போட்டுக் இருக்கிறோம். அவருக்கு என்னதான் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது, நிறுவனர் ராமதாசா என்று கேட்டுவிட்டு கொள்ளு பேரனுடன் கொஞ்சி விளையாடட்டும் என்று கூறி கேட்டை சாத்தி விடு என்றார்கள். நான் உயிர் உள்ளவரை இதுபோல் இருக்க முடியாது என்றேன், நான் அவ்வாறு பழகிப்போனேன். 45 வருடங்களாக எனது பாட்டாளி சொந்தங்களை நான் உயிருக்கும் மேலாக அவர்களை தெய்வங்களாக நான் நினைக்கிறேன். அவர்கள் என்னை குலதெய்வம் என்று நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். நான் அதற்கும்மேலேயே ஒரு படிக்குபோய் அவர்களை என்னுடைய வழிகாட்டிகளாய், தொண்டர்களாக அல்ல, என்னோடு ஒன்றிணைந்த அந்த உயிர்களை நான் ேநசிப்பதை வார்த்தையால் சொல்ல முடியாது. 46 ஆண்டுகள் உழைத்து உருவாக்கி கட்டிக் காத்த கட்சியில் இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா?. எனக்கு உரிமை இல்லையா? என்று கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது. ஒவ்வொரு செங்கல்லாக பார்த்துப் பார்த்துக் கட்டிய பாட்டாளி மக்கள் கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்ற அளவுக்கு அவர்களது செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன.

மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்துநிறுத்தி என்னை பார்க்கக் கூடாது என்று அவரே (அன்புமணி) தொலைபேசியில் பேசி என்னை மானபங்கம் செய்து விட்டார். அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் அதிகாலை 3 மணி வரை தொலைபேசியில் பேசி, போகாதீர் போகாதீர் என்றார். மற்றவர்கள் எல்லாம் நின்று விட்டனர். 8 பேர் மட்டுமே தப்பித்தவறி வந்து விட்டனர். மாவட்ட செயலாளர்களிடம் பொய்யான தகவலை சொல்லி என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எடுக்கப் போகிறார், இதற்கு உனக்கு சம்மதமா? என்ற கேள்வியை எழுப்பி தடுத்துள்ளார். இதை ஒரு மூடன், ஒரு முட்டாள் செய்வானா இந்த வேலையை?. இந்த மாதிரியான செயல்களை அவர் செய்யாமல் ஒத்துப்போய் இருந்தால் ஓரிரு ஆண்டுகளில் நானே அவருக்கு மீண்டும் முடிசூட்டியிருப்பேன். 3 ஆண்டுகளுக்குமுன்பு இதேபோல் முடிசூட்டியபோது நான் ஆனந்த கண்ணீர் விட்டேன் அப்போது.

தீர்வு காண்பதற்கு தாராக மந்திரம் ஒன்றே ஒன்று. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இதை என்னுடைய நண்பர் பழ.கருப்பையா தனது பேட்டிகளில் அருமையாக சொல்லி இருப்பார். இதை யாரோ தெரியாமல் அந்த காலத்தில் சொல்லிட்டான், இந்த காலத்துக்கு பொருந்தாது. தந்தைக்கு பிறகே தனயன், அய்யாவுக்கு பிறகே அன்புமணி. இது இப்போது எல்லோரும் சொல்லுகின்ற வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம் ஆகும். இதுவே உளவில் நியதியும் ஆகும். இதுவே சாஸ்திர சமுதாயமும் ஆகும். எனது மனக் குமுறல்கள் என்னை எங்கள் குலசாமி என்று சொல்லிக் கொண்டு என் நெஞ்சுக் கொளைகளில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாம் அய்யாதான் என்று என்னை அதல பாதாளத்தில் தள்ள நினைக்கிறார்கள். அனைத்தும் அய்யாதான் என்று சொல்லிக் கொண்டே என்னை அவமானப்படுத்துகிறார்கள். அய்யாவின் பெருமையை, புகழை பேசுவதையே எங்கள் பெருமை என்று சொல்லிக் கொண்டு சிறுமைப்படுத்துகிறார்கள், அய்யாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொண்டே என்னை அலட்சியம் செய்கின்றனர். நான் உருவாகிய சமூக நீதிப் பேரவை வலைதளத்திலும் இதை பரப்புதல் செய்கிறார்கள்.

என் கைவிரலைக் கொண்டே நான் என்னை குத்திக் கொண்டேன். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசீனம் செய்து விட்டு என் உருவப் படத்தை மட்டும் வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணம் ஆக்கி என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் செய்யப் போகிறார்களாம். இது எல்லாமே நாடகம், அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள் தான். நான் 7 வருடத்துக்கு முன்பே நான் டெல்லிக்கு மோடியை பார்க்க சென்றிருந்தேன். அப்போது நான் கட்சியைப் பார்த்துக்கிறேன் என்றார் அன்புமணி. அப்பா நான் தப்பா சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அப்போது 2 சொட்டுக் கண்ணீர் அங்கு உட்கார்ந்தபடி விட்டேன். அது நான் பயணித்த விமானத்தில் விழுந்தது. பின்னர் அங்கிருந்து மீனம்பாக்கம் வந்து தைலாபுரம் வந்தேன். இது நடந்த 6, 7 வருடங்கள் இருக்கும். ஆக அப்போதே அந்த மாதிரி (கட்சியை கைப்பற்றும்) ஒரு எண்ணம் இருந்திருக்கிறது. அதன்பிறகு அவர் எப்படி தலைவர் ஆனார் என்பது சிலருக்கு தெரியும், ஒருசிலருக்கு தெரியாது. மனவருத்தம் ஒருநாள் ஏற்பட மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நான் தங்கியிருந்தேன். அங்கு வந்த சௌமியா மாமா என்றார்… ஏம்மா என்றேன்… இன்று புதன்கிழை, அடுத்த புதன்கிழமை நாள் நன்றாக இருக்கிறது, மண்டபம் பார்த்துவிட்டேன், ஓய்வறியா செம்மல் ஜிகே மணியை தலைவரை மாற்றிவிடவும் என்றார்.

அவரும் வந்தார் நானும் சொன்னேன். அதற்கு அவர் ஒன்றரை மாதம் பொறுத்து செய்யுங்கள் என்று சொன்னார்கள். நானும் சரி என்றேன். பிறகு சௌமியாவையும் வரவழைத்து கூறினேன். பிறகு அந்த நாளும் வந்தது. நான் அன்புமணிக்கு முடிசூடி ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். அப்போது நான் பேசும்போது சொன்னேன், என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிக்கோ, அரசியலிலோ ஈடுபடக் கூடாது என்றேன். ஆனால் இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு தெரியும். கோயில் கோயிலாக இதுவரை ஆயிரம் கோயில்களுக்கு சென்றிருப்பார்கள். இது அவர்களது உரிமை. ஆனால் என்ன வேண்டுதல் என்று எனக்கு தெரியவில்லை.
எனது ஆத்தூரில் உள்ள ஜோசியரை 2 பேர் திடீரென சென்று பார்த்தார்கள். அந்த ஜோசியரை பார்த்து ஏற்பாடு செய்த இப்போது மாவட்ட செயலாளராக போட்டுள்ள அவர் சொன்னார். இப்போது இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்த தோஷமும் வராது என்று சொன்னாராம். எனது அப்பாவுக்கு ஜோசிய நம்பிக்கை உண்டு. ஆனால் எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். இதன்பின் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார். சமரச பேச்சுவார்த்தை எப்படி நடந்தது? ராமதாஸ்: சமரசபேச்சுவார்த்தைக்கு 2 பேர் வந்தார்கள், அவர்கள் எல்லாம் பெரிய ஜாம்பாவான்கள், பெருமைக்குரியவர்கள்.

அவரிடம் அவர்கள் பேசி இருக்கிறார்கள். தேர்தல் முடிந்தபிறகு அவர்தான் எல்லாம் பார்க்க போகிறார். ஆனால் அரசியலில் வாரிசு கிடையாது. நான் உங்களிடம்கூட கொடுத்துவிட்டு செல்ல முடியும். அன்புமணிக்கு பாஜக பின்புறம் உள்ளதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, பின்புலம் எதுவும் இல்லை. அவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார். நான் உங்களிடம் கேட்கிறேன். முயலுக்கு எத்தனை கால்கள் என கேட்டால் என்ன ெசால்வீர்கள், 4 கால்கள் என்று, ஆனால் அவர் 3 கால்கள்தான் என்பார். எதையும் ஒத்துக் கொள்ள மாட்டார். ஒத்துக் கொண்டால் எல்லாம் முடிந்துவிடும். அன்புமணியின் கட்சித் தலைவர் பதவியை பறிக்க என்ன காரணம்? ராமதாஸ்: தர்மபுரியில் யார் நிற்பது என்று கேட்டேன். நான்தான்… நான்தான்… என்றார். பிறகு காலையில் பார்த்தால் பாரத் மாதா கி ஜே என்ற சத்தம் கேட்டது. அப்போது அக்கட்சியின் தலைவராக இருந்தவருக்கு டிபன் கொடுத்தார்கள். இதுவும் எனக்கு தெரியாது. பிறகு நான் நிற்கவில்லை, சௌமியாதான் நிற்கிறது என்றார். நான் ஏற்கனவே கூறியபடி குடும்பத்தில் இருந்து பெண்கள் நிற்க கூடாது என்றேன். பிறகு எனது குடும்ப உறவினர்கள் எல்லாம் கெஞ்சி, கூத்தாட நானும் நின்று கொள்ளுட்டும், போகட்டும் என்றேன். பிறகு சௌமியா வந்தது, நானும் கையெழுத்து போட்டேன்.

தற்போது எங்கள் பொதுச் செயலாளரை தேடி வருகிறோம். நாங்கள் 7 ஸ்டார், 5 ஸ்டார் ஓட்டல்களில் தேடிக் கொண்டிருக்கிறோம். அங்கு தங்கி தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறாரா? என தெரியவில்லை. அவர் கடத்திச் செல்லப்பட்டாரா? நீங்கள் கண்டுபிடித்து சொல்லுங்கள். இப்போது மிதக்கிறார்…மிதக்கிறார் என்ற தகவல் வருகிறது. சமூக நீதி பேரவை தலைவர் மாற்றம் குறித்து? ராமதாஸ்: வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவரை மாற்றிப் போட்டு இருக்கிறோம். ஏனென்றால் ஒருத்தரே இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு முன்பும் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் இருந்தனர். அவர்களும் இவரை விட திறமை சாலிகள். பிறகு வேறு கட்சிக்கு சென்று விட்டார்கள். இப்போதும் என்னுடன் மரியாதையாக இருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை யாருடன்? ராமதாஸ்: வருகிற தேர்தல் நடைபெறும்வரை நான்தான் தலைவர். கூட்டணி மந்திரி சபையில் அங்கம் என்ற நிலைக்கு நான் போக மாட்டேன். 19 பேர் நிர்வாகக் குழுவில் உள்ளனர். அவர்களில் ஒருவர் இவரை லேசாக விமர்சித்தார். அப்போது அன்புமணியை பார்த்து பயந்தார்.

ஏனென்றால் துப்பாகி அவரிடம் (அன்புமணியிடம்) இருந்திருந்தால் அவரை சுட்டே இருப்பார். அப்படிப்பட்ட சூழல் இருந்தது. அப்போதுதான் தலைமைப் பண்புகள் அவரிடம் இல்லை என்பதே நான் உணர்ந்தேன்.அன்புமணி யாரிடமும் தொலைபேசியில் பேச மாட்டார். ஆனால் இப்போது பிரியாணி போட்டு கூவிகூவி அழைக்கிறார்.
பாமகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறவர்களுக்கு நல்லது, கெட்டது எதுவென்று அவர்களுக்கு தெரியும். தலைவர் பதவி என்பது 3 வருடம்தான். மீண்டும் பொதுக்குழு கூடி தலைவரை தேர்ந்தெடுக்கும். பொதுக்குழுவை கூட்டி விரைவில் தேர்ந்தெடுப்போம். அதை கூட்டும் அதிகாரம் நிறுவனருக்கு உண்டு. பாமக தேர்தலை நோக்கி செல்கிறது. எல்லாவற்றையும் நான்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த காலத்தில் திமுகவுடன் கூட்டணிக்கு 6 மாதத்திற்கு முன்பே கலைஞரை போய் சந்திப்போம். அவரும் கையெழுத்து போடுவார், நானும் கையெழுத்து போடுவேன். ஆனால் வெளியே வந்து அவரை பார்க்க வந்ததாக கூறிவிட்டு வந்துவிடுவேன். பிறகுதான் கூட்டணி தொடர்பான தகவலை வெளியிடுவோம். 2004ல் 6 எம்பி தொகுதியில் போட்டியிட்டோம். அதில் 6 தொகுதியையும், ஒரு ராஜ்யசபா எம்பியையும் ஜெயிச்சுட்டோம். 100 விழுக்காட்டிற்கு மேல் ஜெயித்தோம்.

2016ல் மாற்றம்… முன்னேற்றம்.. அன்புமணி நடத்தினீர்களே, அதில் உங்களுக்கு உடன்பாடு இருந்ததா? உடன்பாடு இல்லாமலா செய்தோம். உள் ஒன்று வைத்து புறம்பொன்று பேசுவோர் என்றால் அதற்கான அர்த்தம் என்ன?. காலம் போக போக எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு தொியும். நான் நியமிக்கிறவர்களை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். தந்தை என்னை செயல் தலைவராக இருக்க சொல்லி இருக்கிறார். நான் செயல் தலைவராக இருந்து செயல்படுவேன். அதுவும் வேண்டாம் என்று அவர் சொன்னால் சாதாரண தொண்டனாக இருந்து அவர் காட்டும் வழியில் செல்வேன் என்று அன்புமணி கூறியிருக்க வேண்டும். ஆனால் அந்த நிலையில் தற்போது அவர் இல்லை. தலைவர் மாற்றப்பட்டு இருக்கிறார் என தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுத்து விட்டீர்களா? என்று கேட்டபோது, அதை செய்துதான் ஆக வேண்டும். பிரச்னை முடிந்துவிடும் என்பதாொல் இப்போது கொடுக்கவில்லை. பாமகவில் யாருக்கு அதிகாரம் என்ற கேள்விக்கு, நான்தான் நிறுவனர், தலைவர். ஓட்டுப்போடுகிற மக்கள் 18 வயதோ, 90 வயதோ அவர்கள் எல்லோரும் என்பக்கம்தான் இருக்கிறார்கள்.

எனக்கு மக்கள்தான் முக்கியம், நாடுதான் முக்கியம். பாமக ஒரு சாதிக்கான கட்சி அல்ல. தமிழ்நாட்டில் உள்ள 324 சாதியினர் சமூக நீதியோடு, பொருளாரத்தில் உயர்ந்து இருக்க வேண்டும் என பாடுபட்டு வருபவர் இந்த ராமதாஸ் என்றார். தவெகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி வருவது தொடர்பான கேள்விக்கு, இதுவரை இல்லை. கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசியபிறகு முடிவு செய்வோம். குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பதற்கான காரணம் என்ன?. ராமதாஸ்: தமிழகத்தில் ஜெயலலிதா என்ற அம்மையார் இருந்தார். மற்ற யாரும் வந்தார்களா?. விஜயகாந்த் கட்சியில்கூட அவர் மறைந்த பிறகுதான் இந்த அம்மையார் வந்துள்ளார். நான் கும்மிடிப்பூண்டியில் இருந்து குமரி வரை 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளேன். என்னால் நடக்க முடியாமல் கோல்ஊன்றி போக வேண்டிய நிலை வந்தாலும், இந்த ஊமை ஜனங்களுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக நான் பாடுபடுவேன்.

ஜிகே மணி மனஉளைச்சலில் இருப்பதன் காரணமாக டாக்டரை போய் நான்தான் பார்க்கச் சொல்லி இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிக்காரர்களும் ராமதாஸ் எடுத்துள்ள முடிவு சரியான முடிவுதான் என்று சொல்கிறார்கள், மானசீகமாக நினைக்கிறார்கள். உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை, அதனால்தான் அவரது கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. உங்களது பிறந்தநாளில் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி தொடங்கப் போவதாக தகவல் வந்துள்ளதே? ராமதாஸ்: ஒன்றும் சொல்வதற்கில்லை. அமித்ஷா சமீபத்தில் தமிழகம் வந்தார். அவர் சார்பில் உங்களுடன் கூட்டணி தொடர்பாக யாராவது நடத்தினார்களா? ராமதாஸ்: யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் பேச்சுவார்த்தைக்காக 2 பேர் இங்கே வந்தார்கள். அங்கேயும் அழைத்தார்கள். அவரிடமும் பேசினார்கள். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

 

The post சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது; அன்புமணி மீது மீண்டும் ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு: நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article